தவெக+பாமக+காங்., தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! ஒரே குரலாய் ஒலிக்கும் கட்சிகள்.. விஜயின் மாஸ்டர் ப்ளான்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதியை விஜய் இன்று அறிவித்திருக்கிறார். அதே நாளில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் புயல்கள் எழுந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ராமதாஸ் பேச, காங்கிரஸின் திருச்சி வேலுச்சாமி, செல்வப் பெருந்தகையும் அதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். திமுகவின் நான்கு வாக்குகளில் ஒரு வாக்கு விசிகவுடையது என திருமாவளவன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என ஏற்கனவே விஜய் சொல்லி இருக்கும் நிலையில் அக்கட்சியை நோக்கி காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் நகர்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் நேரடியாக முதல்வர் கனவோடு தான் வருவார்கள். தனித்து ஆட்சி அடுத்து தலைவர் தான் முதல்வர் என்ற முழக்கம் வேறு இருக்கும். அப்படித்தான் நடிகர் விஜயின் கட்சி ஆரம்பித்தார்.
ஆனால் இதுவரை ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளிலேயே கூட்டணி ஆட்சிக்கு தயார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என மாநாட்டு மேடையில் அறிவித்த ஒரே அரசியல்வாதி என்றால் அது விஜய் தான். கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
அதில் பேசிய விஜய் தான் மேற்கூறிய கருத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக, அதிமுக தயாராகி வருகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட கூட்டணி தான்.

கூட்டணி மிக வலுவாக இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களும் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில் அவ்வப்போது கூட்டணியில் சில சலசலப்புகளும் எனத் தொடங்கியிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடுதல் இடங்களை பெறவேண்டும் என வலியுறுத்தி வந்தன.
இதற்கிடையே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழகத்தில் எழுந்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறினார். ஆனால் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்பட பேசியுள்ளார். தற்போது அதையே திமுகவில் உள்ள கட்சிகளும் பேச ஆரம்பித்திருக்கின்றன. திருச்சியில் மாவட்டம் மணப்பாறையில் நேற்று காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கூட்டணியில் கணிசமான தொகுதிகளை பெற வேண்டும். 2026 தேர்தலில் இரண்டு காங்கிரஸ்காரர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என கூறினர்.
இன்று அதே கேள்வியை செல்வப் பெருந்தகையிடம் கேட்டபோது திருச்சி வேலுச்சாமி கருத்தை வரவேற்பதாகவும், அது தான் காங்கிரஸ் நிலைப்பாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் எனக் கூறி திமுக தலைமையை அதிர வைத்திருக்கிறார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதியை இன்று அறிவித்தார் விஜய். தனது திருமண நாளில், விஜயகாந்தின் பிறந்த நாளில் மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
அந்த மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என பேசினார் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளரான லயோலா மணி. இதற்கிடையே பாமகவின் 37வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026 தேர்தலில் நிச்சயம் கூட்டணி ஆட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவோம். அதை நோக்கியே நமது பயணம் இருக்கும் என கூறி இருக்கிறார்.
இப்படியாக விஜய் மாநாட்டு தேதியை அறிவித்த அதே நாள் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என கூறி இருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு படி மேலே போய் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக 4 வாக்குகள் வாங்குகிறது என்றால் அதில் ஒரு வாக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உடையது. 2026 தேர்தலில் நிச்சயம் திமுகவின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் விசிக தொடரும் என திருமாவளவன் கூறியிருந்தாலும், வரும் தேர்தலில் கூடுதல் இடங்கள் அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார் திருமாவளவன் என்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இதற்கிடையே மதுரை தவெக மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறி வரும் நிலையில், காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி சேர முயன்று வருகின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications