Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டி என அதன் தலைவர் விஜய் கூறி வந்த நிலையில் தற்போது 233 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறார்களாம். ஏன் என்னாச்சு என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட அருண்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நித்யா என்பவர் மாற்று வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வேட்புமனு பரிசீலனையின் போது, அருண்குமாரின் மனுவில் போதிய விவரங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், ஆவணங்களில் குளறுபடிகள் இருந்ததாகவும் கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் மனுவை நிராகரித்தார்.
பொதுவாக முதன்மை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இங்கு துரதிர்ஷ்டவசமாக மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.
கட்சித் தலைவரான விஜய், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், எடப்பாடி போன்ற ஒரு முக்கிய தொகுதியில் மனுத் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட இந்த அலட்சியம் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
234 தொகுதிகளிலும் தனித்து நின்று பலத்தை நிரூபிப்போம் என மேடைதோறும் முழங்கிய தவெக-விற்கு, ஒரு தொகுதியைத் தாரை வார்த்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
முதல் தேர்தலிலேயே முழுமையான எண்ணிக்கையில் களமிறங்க முடியாமல் போனது தொண்டர்களிடையே சிறிய தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
"அரசியல் களம் என்பது சினிமா படப்பிடிப்பு அல்ல; இங்கே ஒவ்வொரு நகர்வும் மிக முக்கியம்" என எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தைக் கிண்டலடிக்கத் தொடங்கியுள்ளன. வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் தெரியாதவர்களா ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் கொடி பறக்கும் என எதிர்பார்த்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, எடப்பாடி தொகுதியின் இந்தத் தோல்வி (களம் காண்பதற்கு முன்பே) ஒரு கசப்பான அனுபவமாகவே பார்க்கப்படுகிறது.
இனி மீதமுள்ள 233 தொகுதிகளில் முழு வீச்சில் கவனம் செலுத்த தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யை தவிர தவெக வேட்பாளர்கள் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications