விஜய்க்கு சிக்கல்? சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்ட வெளிநாட்டினர்! அதிகரிக்கும் கைது எண்ணிக்கை!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நேற்றிரவு வரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இப்படியே அதிகரிக்கிறது எனில், முதலமைச்சர் விஜய்க்கு சிக்கல் ஏற்படலாம் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இக்கட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்ததால், விஜய் தற்போது முதலமைச்சராக தேர்வாகியிருக்கிறார்.

சட்டவிரோதமாக வாக்களித்த வெளிநாட்டினர்
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தொடர்ந்து வெளிநாட்டினர் கைதாகி வருகின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களின் விரலில் இருந்த ஓட்டு போட்டதற்காக அடையாளத்திற்கு வைக்கப்பட்ட மை அவர்களை காட்டி கொடுத்திருக்கிறது.
25 பேர் கைது
கையில் மை உடன், வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை பிடித்து விசாரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதனையடுத்து சென்னை, மதுரை, திருச்சி என சர்வதேச விமான நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் நேற்றுவரை 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று மேலும் 2 பேர் கைதாகியிருக்கின்றனர். ஒருவேளை இந்த எண்ணிக்கை அதிகரித்தால் பெரிய சிக்கல் ஏற்படும்.
எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றவர்கள். ஆனால், இவர்களிடம் இன்னும் இந்திய முகவரியில் உள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இருந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்தி இவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்திருக்கிறார்கள்.
சட்ட நடவடிக்கை
இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS): போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act, 1950): தகுதியற்ற நபர் வாக்களித்தல் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act): விசா விதிமுறைகளை மீறுதல் மற்றும் குடியுரிமையை மறைத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
களத்தில் இறங்கிய காவல்துறை
தேர்தல் சமயத்தில் தமிழகம் வந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் வெளிநாட்டினரின் பட்டியலை எடுத்து, அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து உளவுத்துறையும் காவல்துறையும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முறையான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடந்தும், இவ்வளவு பேர் எப்படி வாக்களித்தனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விஜய்க்கு சிக்கல்
ஒருவேளை இப்படி சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கும், தோல்வியடைந்தவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்போது, அங்கு இத்தனை சட்டவிரோத வாக்குகள் பதிவாகியிருப்பது தேர்தல் முடிவையே கேள்விக்குறியாக்கும்.
தோல்வியடைந்த வேட்பாளர் நீதிமன்றத்தில் 'தேர்தல் வழக்கு' தொடரலாம். நீதிமன்றம் அந்தத் தொகுதியின் முடிவை ரத்து செய்யவோ அல்லது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவோ உத்தரவிட வாய்ப்புள்ளது. எனவே இது விஜய்க்குதான் சிக்கலாக அமையும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications