அடுத்தடுத்து அனுமதி.. ஆனாலும் தள்ளிப் போகும் தவெக மாநாடு.. விஜய் டிவிஸ்ட்
சென்னை: கோட் படம், தவெகவின் அரசியல் பயணம் என்று நடிகர் விஜய் பரபரப்புடன் இருக்கிறார். தவெகவுக்கு அரசியல் கட்சிக்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கிய நிலையில், அவர்களின் முதல் மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி வழங்கிவிட்டது. அடுத்து மாநாடு தான் என அவர்களின் தொண்டர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், அதில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் கோட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுகுறித்த விவாதங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் விஜயின் அரசியல் பிரவேசம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் விஜய் மாநாட்டு தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை கோட்பாட்டோடு, நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே.
முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வ பதிவுக்காகவுமே, நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தோம்.
அதைச் சட்டபூர்வமாகப் பரீசிலித்த தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கியுள்ளனர். இதை உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்ல போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்துள்ளது.
இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளை தகர்த்தெறிந்துஇ கொடி உயர்த்தி, கொள்ளை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திபோம். வாகை சூடுவோம்." என்று கூறியுள்ளார்.
விஜயின் இந்த அறிவிப்பில் மாநாடு தேதியும் இடம்பெறும் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதில் தேதி குறிப்பிடவில்லை. தவெகவின் மாநாட்டை வருகிற 23ம் தேதி விக்கரவாண்டியில் நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் காவல்துறை அனுமதி, ஜோதிடம் உள்ளிட்ட காரணங்களால் தேதி தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது காவல்துறை மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விஜய் தன்னுடைய அறிக்கையில், "மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்" என்று கூறியிருப்பதால், மாநாடு தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 23ம் தேதிக்கு இன்னும் 15 நாள்களே உள்ளன. காவல்துறை மாநாட்டுக்கான தடையின்மை சான்றை வழங்க தயாராக இருந்தும், அதை தவெக சார்பில் யாரும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுத்த பிறகே மாநாடு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications