Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
சென்னை: தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இந்த விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளானது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி, சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதோடு நிரந்தர ஜீவனாம்சமும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட விவரம் வெளியானதும், ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பிரசார பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
இதனால் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இருதரப்பினரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் மனுக்களை தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மே மாதத்தில் விசாரணைக்கு வந்தபோது மீண்டும் வழக்கு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதாவது, முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணமாக, இருவரும் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி வாயிலாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதன் மூலம் இருதரப்பும் நேரடியாக நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சொல்லியுள்ளது நீதிமன்றம்.
காணொலி விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. காரணம், உயர்பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் தொடர்பான சில வழக்குகளில் காணொலி விசாரணைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கிய சம்பவங்கள் முன்பும் இருந்துள்ளன. ஆனால் இந்த வழக்கில் அத்தகைய அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில், சங்கீதா தரப்பில் வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரின் மின்னஞ்சல் முகவரிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளார் நீதிபதி சுஜாதா. இதனையடுத்து அன்றைய தினம் விஜய் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications