விஜயை வைத்து விளையாடும் ‘மும்மூர்த்திகள்’..கரூர் போக கோர்ட் எதுக்கு? சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணத்திற்கு மூன்று நாளைக்கு பிறகு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் வருத்தம், இரங்கல் என எந்தவிதமான வார்த்தையும் பயன்படுத்தாதது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் கரூர் மக்களை சந்திக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கரூர் விஜய் செல்ல இருப்பதாகவும், இதற்கெல்லாம் நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்கின்றனர். மற்ற தலைவர்கள் எல்லாம் நீதிமன்ற அனுமதி வாங்கிவிட்டா கரூர் சென்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர், தலைமைக் கழகத்தில் இருக்கும் சிலர் விஜயை தவறாக வழிநடத்துகிறார்கள் என குற்றம் சாட்டுகின்றனர்.
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது. பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, கட்சி தலைவர் விஜயின் நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களை நேரில் சந்திக்கும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்தார்.

விஜய் கரூர் சம்பவம்
கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் இரவு அவர் உரையாற்றும் நேரத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்ததும் விஜய் உடனடியாக கரூரை விட்டு காரில் திருச்சிக்கு சென்றார். அங்கிருந்து தனியார் விமானத்தில் சென்னை திரும்பினார். சம்பவத்திற்கான காரணம் குறித்து விளக்கம் அளிப்பார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் எந்தவித அறிக்கையும் வெளியிடாமல் அமைதியாக சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
த.வெ.க கூட்ட நெரிசல்
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வரை அவர் கரூருக்குச் செல்லவில்லை. இதற்கிடையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் இருவரும் தலைமறைவாகி விட்டனர். தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா வழியாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விட்டனர். ஆனால், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கரூருக்கு செல்ல நீதிமன்ற அனுமதி கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் த.வெ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
த.வெ.க உள்கட்டமைப்பு
கட்சியின் உள்நிலை வட்டாரங்களில் கூறப்படுவதாவது,"விஜய் கரூருக்குச் சென்று ஆறுதல் கூறாமல் தாமதிப்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சொந்தக் கட்சி தொண்டர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க போலீஸ் அனுமதி தேவையில்லை. நீதிமன்ற அனுமதி கேட்பது தேவையற்றது. விஜயின் இந்த நடவடிக்கைகள் கட்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்," என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நீதிமன்ற அனுமதி கேட்டு மட்டுமே அவர் கரூருக்குச் செல்ல முடிவு செய்திருப்பது த.வெ.க. உள்கட்டமைப்பில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications