800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா?.. ஓரிரு நாளில் முடிவு என தகவல்
சென்னை: முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்து ஓரிரு நாளில் பதில் அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. 800 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. குழந்தை பருவத்தில் இருந்து அவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசப்படுகிறது இந்த திரைப்படம்.
படைப்பாளிகள்
இந்த படத்தில் நடிக்கக் கூடாது என தமிழ் தேசியவாதிகளும் படைப்பாளிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். விளையாட்டில் முத்தையா முரளிதரன் என்னதான் சாதனைகள் படைத்திருந்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்ட போது சிரித்து மகிழ்ந்தவர் என்ன சாதித்தாலும் என்ன பயன்?
முத்தையா முரளிதரன்
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்திருந்தார். இதனால் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பலர் வலியுறுத்தி வருகிறார்கள். பாரதிராஜா, வைரமுத்து, சேரன், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் இந்த படத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார்கள்.
வைரமுத்து
இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி என வைரமுத்து தெரிவித்துள்ளார். இவரை போல் சீமான் உள்ளிட்டோரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்கள்.
அறிவிப்பு
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதா வேண்டாமா என்பது குறித்து விஜய் சேதுபதி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் தொடர்ந்து நடிப்பதா, இல்லை விலகுவதா என விஜய் சேதுபதி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிப்பார் என தெரிகிறது.