அந்த மனசு தான் கடவுள்..250 பேருக்கு 1.30 கோடி! அள்ளி கொடுத்த விஜய் சேதுபதி! ஃபெஃப்சி கொடுத்த கவுரவம்
சென்னை: சென்னை அருகே இருக்கும் பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெஃப்சி அமைப்பின் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்ள 100 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 250 தொழிலாளர்களுக்கு அவர் தலா 50,000 ரூபாய் வீதம் பணம் கொடுத்திருக்கும் நிலையில் ஒரு கட்டிடத்திற்கு விஜய் சேதுபதி டவர் என பெயர் சூட்டப்படும் என பெப்ஸி அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என இருப்பது போல லைட் மேன் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பிரபல இயக்குனரான ஆர்கே செல்வமணி இருக்கிறார்.

பல தொழிலாளிகள் இன்னும் ஏழ்மை நிலையில் இருக்கும் நிலையில் அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக கடந்த 2006 - 11 ஆட்சி காலத்தில் பையனூர் அருகே சுமார் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆயிரம் தொழிலாளர்கள் அங்கே வீடு கட்டிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மூன்று வருடங்களுக்குள் அங்கு வீடு கட்ட வேண்டும் எனவும் இல்லை என்றால் நிலம் திரும்ப பெறப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் அங்கு தொழிலாளிகள் வீடு கட்ட இயலவில்லை. இதை அடுத்து அந்த நிலங்கள் மீண்டும் அரசால் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த நிலத்தை மீண்டும் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்க வேண்டும் என பெப்சி நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து இது தொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில் கடந்த 21ஆம் தேதி பெப்சி தொழிலாளர்களுக்கு மீண்டும் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்குள் வீடு கட்ட தொடங்க வேண்டும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சுமார் 1000 வீடுகள் கட்ட அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பலர் ஏழ்மை நிலையில் இருப்பதால் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கிறது. ஒரு வீடு கட்டவே சுமார் 2.20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். எனவே வீடு கட்ட இயலாத தொழிலாளர்களுக்கு நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
அதில் ஒரு தொழிலாளருக்கு 50,000 வீதம் 250 தொழிலாளர்களுக்கு அவர் பணத்தை தந்திருக்கிறார். இதனையடுத்து ஃபெஃப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிலத்தில் கட்டப் போகும் ஆறு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு குடியிருப்புக்கு விஜய் சேதுபதி டவர் என பெயர் சூட்ட இருப்பதாக கூறி இருக்கிறார் ஆர்கே செல்வமணி.
மேலும் திரைப்படத்துறையில் நீண்ட காலமாக பயணிக்கும் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு வசதியான நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நலத்தை மீண்டும் வீடு கட்ட பயன்படுத்த அனுமதித்த தமிழக அரசுக்கும், மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய விஜய் சேதுபதிக்கும் பெப்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications