விஜய் போட்டியிடும் தொகுதி.. உற்றுக் கவனிக்கும் திமுக, அதிமுக.. திட்டத்தை மாற்றிய தவெக தலைமை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்த எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பல்வேறு தொகுதிகளில் கருத்துக்கணிப்பை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தவெகவின் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், சுமார் 4 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர். அதில் பெரும்பான்மையான மக்கள் விஜயை பார்க்கவே குவிந்ததால், பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது.

இந்த மாநாட்டில் விஜய் பேசுகையில், எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவிக்க, ஒட்டுமொத்த தவெக தொண்டர் கூட்டமும் அதிர வைத்தனர். ஆனால் 234 தொகுதிகளில் தவெக சார்பாக நிற்கப் போவது உங்கள் விஜய் என்று அறிவித்து ட்விஸ்ட் கொடுத்தார். இதனால் தவெக தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ள தொகுதி குறித்து அக்கட்சித் தலைமை அமைதி காத்து வருகிறது. விஜய் முதலில் விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், நாகை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனிடையே மதுரையில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த நிலையில் விஜய் போட்டியிட உள்ள தொகுதியை திமுக மற்றும் அதிமுக மேலிடம் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில் நிற்காமல், தனக்கு சாதகமான தொகுதியை குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கோவை, மதுரை, தூத்துக்குடி என்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் விஜய் போட்டியிட வாய்ப்பில்லையாம்.
மாறாக வடமாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியை விஜய் குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் அமைச்சர்கள் அல்லது மாவட்டச் செயலாளர்கள் செல்வாக்கு அதிகம் இல்லாமல் இருக்கும் தொகுதியை குறி வைத்து தவெக தலைமை கருத்துக் கணிப்பு எடுத்து வருகிறது. கடலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் கவனம் திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்ப விஜய் போட்டியிட உள்ள மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்களை அழைத்து கூடுதல் சிறப்பாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தவெகவின் குறிக்கோள் ஆட்சி அமைப்பது என்பதை எல்லாம் கடந்து, விஜய்யை சட்டசபைக்குள் அனுப்பி வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இன்னும் தயாராகாத சூழலில், ஓரிரு தொகுதிகளில் வெற்றியும், வாக்கு சதவிகிதம் மிகவும் முக்கியம் என்று தவெக தலைமை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை மனதில் வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட உள்ளதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications