அமைச்சர்கள் மட்டுமல்ல.. முதலமைச்சரும் சைலண்ட் மோட்! லைவ் கட் பண்ண காரணம் இதுதானா!
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமல்லாது, முதலமைச்சர் விஜய்யும் பதிலளிக்காமல் இருந்தது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சட்டமன்ற கூட்டத் தொடரின் 2வது நாளான இன்று, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரை மீது விவாதங்கள் தொடங்கின. இங்குதான் சட்டமன்றத்தின் லைவ் கட் ஆனது.

பயர் மோடில் திமுக
இந்த விவாதத்தின் போது சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் பயர் மோடுக்கு வந்தனர். அரசின் செயல்பாடுகள் குறித்த சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின், சட்டம் ஒழுங்கு மற்றும் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு உள்துறையை வைத்திருக்கும் அமைச்சர்தான் பதிலளிக்க வேண்டும். அதாவது, முதலமைச்சர்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் கொடுத்திருந்தார்.
லைவ் கட்
இது குறித்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சட்டமன்றத்தில் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்காமல் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள் என்கிற காரணத்தால்தான் லைவ் துண்டிக்கப்பட்டதோ? என்கிற சந்தேகம் எழுகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில், நாங்கள் பதிவு செய்த கருத்துகள் நேரலையில் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், நேரலை வராத காரணத்தினால் நாங்கள் இப்போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறோம். ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருந்த சாதனைகள் எங்கள் ஆட்சிக்காலத்தில் நடந்தது.
ஆதவ் அர்ஜுனா
அதேபோல எங்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பிங்க் போலீஸ் என்கிற திட்டத்தைதான், தற்போது பெயர் மாற்றி சிங்கப்பெண்கள் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் நாங்கள் பேசியிருந்தோம். இதற்கு அமைச்சர்கள் மழுப்பலாக பதிலளித்தார்கள். இது எதுவும் நேரலையில் வரவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சர் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், காவல்துறைக்கு நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.
வாய் திறங்க CM
முன்னதாக நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், மாநிலத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதலமைச்சர் வாய் திறந்து பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, 'வாய் திறங்க CM' என்கிற கருப்பு பேட்ஜை அணிந்துக்கொண்டு வந்திருந்தனர். இருந்தும் கூட, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்காமல் இருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications