பாஜகவை விடுங்க.. திமுகவை மொத்தமாய் டார்கெட் செய்த விஜய்! திராவிட கோட்டையில் தவெக கொடி பறக்குமா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் நேற்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். திராவிட கோட்டை என அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அவரது பேச்சில் திமுக எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பாஜக குறித்து பேசினார். மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து விஜய் பேசியிருக்கும் நிலையில் விஜய்க்கு திரண்ட கூட்டம் வாக்காக மாறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2026 தேர்தலை முன்னிட்டு கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார் விஜய். கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த நிலையில் ஒரே ஆண்டில் இரு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்திய விஜய், தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் திருச்சியில் தொடங்கிய சுற்றுப்பயணம் நேற்று டெல்டாவின் தாய்மடியான திருவாரூர் மற்றும் நாகையில் நடைபெற்றது. விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் பிரதானமாகக் கொண்ட நாகை மற்றும் திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தினர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விஜய் பிரச்சாரம்
இரு மாவட்டங்களிலும் விஜய்யின் பேச்சு திமுகவை முழுக்க முழுக்க டார்கெட் செய்வது போலவே இருந்தது. விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை ஆகியவற்றை முன்வைத்து பேசிய விஜய் திமுக அரசு செய்தது என்ன? என ஜெயலலிதா பாணியில் செய்தார்களா? செய்தார்களா? என தொண்டர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். மேலும் மீனவர் பிரச்சினையில் வெளியுறவுக் கொள்கையை பராமரிப்பது மத்திய அரசு என்ற நிலையில் திமுகவை மட்டுமே விஜய் டார்கெட் செய்து பேசியது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
திமுக விமர்சனம்
கொள்கை எதிரி என பாஜகவை கூறினாலும் தனது பிரச்சாரத்தின் 99 சதவீதம் பகுதியை திமுகவை விமர்சனம் செய்வதிலேயே விஜய் செலவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் அடிப்படை வசதிகள் இல்லை, கலைஞர் தேரை ஓடவிட்டார், தமிழ்நாடு தேரை ஓட விடாமல் செய்துவிட்டார் ஸ்டாலின் என முழுக்க முழுக்க ஸ்டாலின் எதிர்ப்பே விஜய்யின் பிரச்சாரத்தில் பிரதானமாக இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாகைக்கு வந்திருப்பதாக விஜய் பேசியதையும் கவனிக்க வேண்டும்.
நாகை விஜய்
அதாவது விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது மீனவர் பிரச்சினையைக் கண்டித்து அங்கு ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருந்தார் விஜய். 14 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாகைக்கு விஜய் சென்றிருப்பதையும் கவனிக்க வேண்டும். கொள்கை எதிரி என பாஜகவைப் பிரகடனம் செய்தாலும், அரசியல் எதிரி எனக் குறிப்பிட்ட திமுகவையே விஜய் டார்கெட் செய்து வருகிறார். மேலும், கடந்த காலங்களில் மீனவர் பிரச்சினைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் குறித்தோ அல்லது கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுக குறித்தோ ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் விஜய்
திமுக எதிர்ப்பு மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலையில், விஜயைக் காண்பதற்காக வந்த கூட்டம் எல்லாம் வாக்காக மாறுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. காரணம், நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாகை, திருவாரூர் திராவிடக் கோட்டையாக விளங்கி வருகிறது. திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளே இரு மாவட்டங்களிலும் கோலோச்சி வருகின்றன. மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினையைக் கையில் எடுத்து இருப்பதாக விஜய் கூறினாலும், விஜயைக் காண வந்த கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் விஜய்க்கு கூட்டம் திரண்டிருந்த போதும், திராவிடக் கொள்கைகளில் ஊறிப்போன மக்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைப் பறக்க விடுவார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications