ஒரே போடு.. கரூரில் பலியான 41 பேர் குடும்பங்களை தத்து எடுக்கும் விஜய்.. அனைத்து செலவுகளையும் ஏற்பார்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு விஜய்க்கு சாதகமாக வந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்கிறார். அவர்கள் குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் ஏற்கவிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக விஜய் இருப்பார் என ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரச்சாரம்
மேலும் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், போலீஸார் கூறிய இடத்தில்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் வரவேற்காத நிலையில் கரூரில் மட்டும் காவல் துறை எங்களை வரவேற்றது ஏன்?
விஜய் தாமதமாக வரவில்லை
விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல் துறையினர் அடித்து அனுப்பினர். தவெகவை முடக்க திமுக முயற்சிக்கிறது. காவல் துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சதி
ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம். தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என அரசு திட்டமிட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி இருக்கிறது.
கரூர் எல்லையில்தான் இருந்தோம்
கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல் துறை கூறியதால் நாங்கள் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தனர்.
தலைமைப் பண்பை கேள்வி எழுப்புவதா
விஜய்யின் தலைமைப் பண்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது. விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1ஆம் தேதி டெல்லிக்கு வந்தேன். தவெக, விஜய்யை குற்றவாளி ஆக்கும் வகையில் ஹைகோர்ட் கருத்து தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்கு தவறு என்பதை சுப்ரீம் கோர்ட் தெளிவுப்படுத்தியுள்ளது.
உண்மை வெளிவரும்
எங்கள் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது. தவெக மிகப பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் 4ஆம் தேதி டேராடூன் விமான நிலையத்தில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் "உண்மை வெளிவரும், நீதி நிலைநாட்டப்படும்" என கூறியிருந்தார்.
உச்சநீதிமன்றம் அதிரடி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தீர்ப்பால் விஜய் மகிழ்ச்சியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு பிரச்சாரத்திற்கு செல்வது குறித்தும் அவர் முடிவு எடுப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications