அக்.13ல் கரூர் செல்கிறாரா விஜய்? எடப்பாடி பழனிசாமித்தான் சொல்றாருன்னா நம்பிடுறதா? பிரபலம் நச்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு இறந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க வரும் 13 ஆம் தேதி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமான ஒரு கண்டிஷனும் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: கரூர் மக்களை விஜய் போய் சந்திக்க போகிறார். அந்த சந்திப்பு வரும் திங்கள்கிழமை (அக்.13) நடக்க போகிறது என அதிகாரப்பூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது. கரூர் செல்ல அனுமதி கேட்டு தவெகவினர் டிஜிபி அலுவலகத்திற்கு நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் ஒரு மனு போட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவருக்கு அனுமதி கிடைத்துவிட்டது. பாதுகாப்புக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் எல்லாம் கொடுத்தாகிவிட்டது. அவர் திங்கள்கிழமை செல்கிறார் என உறுதியற்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் விஜய் டிஜிபி அலுவலகத்தில் கொடுத்த மனுவை கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு பார்வேர்டு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் விஜய் தரப்பு கேட்ட போது, விஜய் எத்தனை மணிக்கு எப்படி வருகிறார், அவர் எந்த வாகனத்தில் வருகிறார், அவருடன் எத்தனை வாகனங்கள் வருகின்றன, 41 குடும்பத்தினரை எங்கு சந்திக்க போகிறார் போன்ற தகவல்களை விளக்கமாக கொடுக்குமாறு எஸ்பி அலுவலகம் கேட்டுள்ளதாம்.
விஜய் 41 குடும்பங்களின் வீடுகளுக்கும் தனித்தனியே செல்ல சாத்தியம் இல்லை. எனவே அவர் திருமண மண்டபத்தில் வைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறலாம் என தெரிகிறது. இதில் 41 பேர் குடும்பத்தினரும் விஜய்யை பார்க்க வேண்டும் என விருப்பப்பட்டால் மட்டுமே செல்லலாம். அவர்களை யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் காவல் துறை தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.
இதற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி, "தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு, நமது கொடியை விட உயரத்தில் ஒரு கொடி பறக்கிறது பாருங்கள்" என தவெக கொடியை காட்ட ஆரம்பித்துவிட்டார். உண்மையிலேயே அதிமுகவுடன் தவெக கூட்டணி வைத்துவிட்டதா என்றால் அதெல்லாம் எதுவுமே நடக்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. அப்படியிருக்கும் போது கூட்டணி குறித்து யார் பேசுறது?
முதலில் கரூர் பிரச்சினையை முடித்துவிடுவதில் தவெக குறியாக இருக்கிறது. இப்படி எடப்பாடி ஒரு விஷயத்தை கிளப்பிவிடும் போது ஆளும் கட்சி சும்மாவா இருக்கும். உதயநிதி ஒரு மீட்டிங்கில், "பாஜகவுக்கு பழனிசாமி என்ற ஒரு அடிமை கிடைத்தாகிவிட்டது. இனி எத்தனை புது அடிமைகள் வந்தாலும் கருப்பு சிகப்பு கட்டிய கரை வேட்டிக்காரர்களை ஒன்றும் செய்ய முடியாது என அடித்து கூறிவிட்டார்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி என்ற விவகாரத்தில் சோசியல் மீடியாவில் கொடி ஏந்தியவரின் புகைப்படத்தை போட்டு, தவெக கொடி வைத்திருப்பவர் சட்டையில் பார்த்தீர்களா அதிமுக கொடி. எனவே இது அதிமுகவின் செட்டப் என கூறி வருகிறார்கள்.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் தேர்தலை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு வந்து "உங்களுக்கு வியூகம் வகுத்து தருகிறேன்" என விஜய்யிடம் கூறியிருக்கிறாராம். இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என சொல்லும் சிலர் தனித்து போட்டியிட்டு தவெகவின் வாக்கு சதவீதத்தை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்கிறாராம். ஆனால் தனித்து போட்டியிட்டால் வாக்குகள் சிதறி அது திமுகவுக்கு நன்மையில் முடிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறதாம். இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications