எம்ஜிஆர், என்டிஆர், விஜய்.. 3 எழுத்து பெயருக்கும் ஆளுநருக்கும் ராசியே இல்ல..!
சென்னை: தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு தவெக-வின் வெற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பெரும்பான்மை பிரச்சனை, ஆளுநரின் நிலைப்பாடு மற்றும் ஆட்சியமைப்பில் உருவாகியுள்ள சிக்கல்கள், இந்திய அரசியல் வரலாற்றில் எம்ஜிஆர், என்டிஆர் சந்தித்த மிகப்பெரிய அரசியல் நெருக்கடிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறது.
குறிப்பாக, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவுக்கு 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட "ஆளுநர் பிரச்சனை" தற்போது மீண்டும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இதேபோல் எம்ஜிஆர்-ம் 1980ல் "ஆளுநர் பிரச்சனை"-ஐ எதிர்கொண்டனர். இருவரும் பெரும் நடிகர்களாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் என்பதால் விஜய்-யும் இதே "ஆளுநர் பிரச்சனை"-ஐ சந்தித்து வருவது முக்கிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஜய் இன்னும் முதலமைச்சராக பதவியேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், என்.டி.ராமராவுக்கு நடந்த அரசியல் சம்பவம் தற்போது அரசியல் வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்படுகிறது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு - என்டிஆர் என்டரி
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்கிய என்.டி.ராமராவ், 1982 மார்ச் 29-ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் மிக வலுவாக இருந்த சூழலில், கட்சி துவங்கி சில மாதங்களிலேயே மக்களிடம் பெரிய ஆதரவை பெற்ற என்டிஆர், 1983 சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் திரைப்பட நட்சத்திரமாக இருந்த என்டிஆர் நேரடியாக முதலமைச்சராக உயர்ந்தார். அப்போது அது இந்திய அரசியலின் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்பட்டது. தற்போது விஜய்யின் அரசியல் வருகை + வெற்றியுடன் இதை பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.
1984-ல் வெடித்த அரசியல் சதி
ஆனால் என்டிஆரின் ஆட்சி நீண்ட காலம் தொடரவில்லை. 1984-ஆம் ஆண்டு என்டிஆர் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், அவரது அமைச்சரவையிலேயே அரசியல் சதி நடந்தது.
அந்த நேரத்தில் நிதி அமைச்சராக இருந்த நதேந்த்லா பாஸ்கரராவ், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இருந்தவர் அப்போதைய ஆந்திர மாநில ஆளுநராக இருந்த தாக்கூர் ராம் லால்.
பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு தராத ஆளுநர்
என்.டி.ராமராவுக்கு ஆதரவாக பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் இருந்ததாக கூறப்பட்ட போதிலும், அவருக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு வழங்கவில்லை.
அதற்கு பதிலாக, 1984 ஆகஸ்ட் 15-ஆம் தேதி என்டிஆர் தலைமையிலான அரசை கலைத்து, நதேந்த்லா பாஸ்கரராவை முதலமைச்சராக ஆளுநர் பதவியேற்றினார். இந்த நடவடிக்கை அப்போது நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்தியது.
மக்கள் வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, சட்டசபையில் சோதனை இல்லாமல் கலைத்தது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அனைத்து தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர்.
மக்கள் போராட்டமாக மாற்றிய அரசியல்
என்டிஆரின் நீக்கத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த அழுத்தம் காரணமாக மத்திய அரசு பின்னர் ஆளுநர் ராம் லாலை மாற்றி, சங்கர் தயாள் சர்மாவை புதிய ஆளுநராக நியமித்தது. அதன்பிறகு அமெரிக்காவில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய என்.டி.ராமராவ், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த சம்பவம் இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளுநரின் அதிகார வரம்பு, பெரும்பான்மை சோதனை மற்றும் மாநில அரசுகளை கலைப்பதற்கான அரசியல் நடைமுறைகள் குறித்து நாடு முழுவதும் புதிய விவாதத்தை உருவாக்கியது.
எம்ஜிஆர்-க்கு ஏற்பட்ட "கவர்னர் பிரச்சனை"
எம்ஜிஆர் 1977 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும் வெற்றி பெற்றார். அதன்பிறகு எம்ஜிஆர் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தாலும், அரசியல் ரீதியாக பல சவால்களும் இருந்தன.
1980 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மொத்தம் 39 தொகுதிகளில் 37 இடங்களை அந்த கூட்டணி கைப்பற்றியது. இதனால் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான நெருக்கடியை கொடுத்தது.
"மக்கள் நம்பிக்கையை அரசு இழந்துவிட்டது", "அரசு பதவி விலக வேண்டும்" என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.
அப்போது மத்திய அரசில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆளுநர் மூலமாக அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவு பயன்படுத்தப்பட்டு, 1980 பிப்ரவரி மாதத்தில் எம்ஜிஆர் அரசு கலைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்துவிட்டதாக அதிமுக மற்றும் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
எம்ஜிஆருக்கு ஆதரவாக மாறிய மக்கள் மனநிலை
ஆனால் அரசை கலைத்த முடிவு எதிர்பாராத விதமாக எம்ஜிஆருக்கு அரசியல் அனுதாப அலை உருவாக்கியது. "மத்திய அரசு அநியாயம் செய்துள்ளது", "தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது" என்ற உணர்வு மக்களிடையே வேகமாக பரவியது.
இதன் விளைவாக, சில மாதங்களிலேயே நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. எம்ஜிஆர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
தற்போது தமிழக அரசியலில் ஏன் இந்த ஒப்பீடு?
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாகவே என்டிஆர், எம்ஜிஆர் எதிர்கொண்ட கவர்னர் பிரச்சனை மீண்டும் பேசப்படுகிறது. குறிப்பாக மூவரும் நடிகர்கள் ஆவார்.
தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் உடனடி அழைப்பு கிடைக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு முறை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், தற்போது இந்த விவகாரம் சட்ட ரீதியான போராட்டத்தை நோக்கி நகர்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
112 எம்எல்ஏ ஆதரவு இருந்தும் ஏன் அழைப்பு இல்லை?
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனுடன் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் வழங்கிய ஆதரவு கடிதங்களும் சேர்க்கப்பட்டதால், தற்போது விஜய்க்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருப்பதால், அந்த எண்ணிக்கையை எட்டாத சூழலில் ஆளுநர் உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.
மேலும், 118 உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு கடிதங்களை கொண்டு வர வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை முற்றுகை எச்சரிக்கை
இதற்கிடையில், விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் மாணவர் காங்கிரஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளன. தமிழகத்தில் அடுத்த சில மணி நேரங்களில் நடைபெறும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான நகர்வுகள் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications