தாமதம், விதிமீறல், வருத்தம்.. தவெக தலைவர் விஜய் வீடியோவில் இடம்பெறாத வார்த்தைகள்!
சென்னை: கரூர் பெருந்துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சுமார் 5 நிமிட வீடியோவில் ஒரு இடத்தில் கூட கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது குறித்தோ, விதிமீறல்கள் நடந்தது குறித்தோ, போலீசாரின் எச்சரிக்கை குறித்தோ, அல்லது நடந்த சம்பவம் தொடர்பாக வருந்துகிறேன் என்றோ பேசாதது விமர்சனத்தை பெற்று வருகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். கரூரில் அடுத்தடுத்து பலரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த போது, விஜய் உடனடியாக திருச்சி வந்துவிட்டு செய்தியாளர்களை கூட சந்திக்காமல் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார். இதன்பின் சுமார் 4 மணி நேரத்திற்கு பின் கரூர் விவகாரம் தொடர்பாக இரங்கல் பதிவை வெளியிட்டார்.

அதேபோல் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக சார்பாக ஒருவர் கூட நேரில் சென்று சந்திக்கவில்லை. களத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை. அதற்கு பதிலாக உடனடியாக தவெகவின் நீதிமன்றத்தை நாட தொடங்கினர். சோசியல் மீடியாவில் ஐடி விங் மூலமாக I Stand with Thalapathy Vijay என்று பதிவிடத் தொடங்கினார்கள்.
இது சாமானிய மக்கள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம் தவெக வழக்கறிஞர் அறிவழகன், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் தவெக கட்சியினர் அல்ல என்று கூறியது சர்ச்சையாகியது. மறுபக்கம் ஆதவ் அர்ஜுனா, தவெக தொண்டர்களையும், இளைஞர்களையும் தூண்டிவிடும் நோக்கில் ஒரு பதிவை எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் தவெக தரப்பில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு இரங்கல் கூட்டத்தை கூட அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்கு பின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மனம் முழுவதும் வலி நிறைந்துள்ளது. எனது வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்ததே இல்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.
என் மீதுள்ள பாசத்தால் மக்கள் அதிகளவில் வந்துவிட்டனர். எங்களின் வலிமையையும், நிலைமையையும் புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.. மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூருக்கு செல்லவில்லை. மக்கள் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வந்துள்ளேன்.
விரைவில் கரூரில் மக்கள் அனைவரையும் சந்திப்பேன். எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நின்று பேசிவிட்டு வந்ததை தாண்டி, எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை. மக்களுக்கு எல்லாமே தெரியும்.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும்.
சிஎம் சார்.. ஏதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்.. எங்களின் அரசியல் பயணம் இன்னும் வலிமையுடன் தொடரும் என்று தெரிவித்துள்ளார். மொத்தமாக தவெக தலைவர் 4.45 நிமிடங்களுக்கு பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது ஏன் என்று விஜய் பேசவில்லை. அதேபோல் மாவட்ட எல்லை தொடங்கி பிரச்சாரக் கூட்டம் நடக்கும் இடம் வரை விஜய் மற்றும் அவரது தொண்டர்கள் செய்த விதிமீறல் தொடர்பாகவும் பேசவில்லை. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த போது, தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களை தடுத்து நிறுத்தாதது ஏன் என்றும் பேசவில்லை.
அதேபோல் கரூர் சம்பவம் நடந்து 3 நாட்களாகிவிட்ட நிலையில், விஜய் அந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின் உடனடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் கூட, விஜய் ஒரு இரங்கலை கூட சொல்லாமல் அவசரமாக சென்னை சென்றது ஏன் என்பதை கூட விஜய் சொல்லவில்லை. தார்மீக பொறுப்பை கூட விஜய் ஏற்காதது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கடந்த 3 நாட்களாக அவரின் தொண்டர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்களோ, அதனை பிரதிபலிக்கும் வகையில் விஜய்யும் பேசி வீடியோ வெளியிட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆதவ் அர்ஜுனா எப்படி ஒரு எக்ஸ் பதிவு மூலமாக, தவெக தொண்டர்களை தூண்டிவிட்டாரோ, விஜய் சினிமா பாணியில் தூண்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications