எனக்குனே வருவீங்களா? சீமான் கோட்டையை சல்லி சல்லியாய் தகர்த்த விஜய்! கட்சி அங்கீகாரமே காலியாயிருச்சே!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. திமுக அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தனிப் பெருங்கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலில் விஜய் பல முக்கிய புள்ளிகளை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக விஜயை மிகக் கடுமையாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் இழந்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரமும் பறிபோய் உள்ளது. கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர், இந்த தேர்தலில் 4 சதவீதத்துக்குள் சுருங்கியுள்ளது.

இப்படி எல்லாம் நடக்குமா? என பலரும் சொல்லி வருவது 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து தான். முதல் தேர்தலிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்.
234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நிலையில் நான் தான் வேட்பாளர் என சொல்லி அடித்து கலக்கி இருக்கிறார். தற்போதைய சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆளுங்கட்சியான திமுக 73 தொகுதிகளுக்குள் சுருங்கியுள்ளது.
கடந்த முறை தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த நிலையில் இந்த தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளதோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்து இருப்பது பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதிமுக 50 தொகுதிகளுக்கு மேல் பெற்றிருக்கும் நிலையில் போட்டியிட்ட பெரும்பாலான பகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து இருக்கின்றனர்.
குறிப்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் டெபாசிட் இழந்திருப்பதும் அந்த கட்சி தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தனது முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பெற்றிருக்கிறார் விஜய். இது எம்ஜிஆர் கூட செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக 24 சதவீத வாக்குகளுடனும், அதிமுக 21 சதவீத வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்ற பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த தேர்தலில் களமிறங்கிய நாம் தமிழர் கட்சி நான்கு சதவீத வாக்குகளை மட்டும் பெற்று இருக்கிறது.
2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்ற நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அப்போது சீமான் உள்பட போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவம் தோல்வியடைந்தாலும், கட்சிக்கு 1.7 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2.15 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
2019 மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சிக்கு 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. மேலும் 22 இடைத்தேர்தல்களில் 3.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக நாம் தமிழர் உருவானது. எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிட்டு இதை சாதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்தைத் தாண்டிய வாக்குகளைப் பெற்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றது. இப்போது மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, 2026 தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நிலையில், தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழந்துள்ளாதோடு, அக்கட்சியின் விவசாயி சின்னமும் பறிபோகும் வாய்ப்பும் உள்ளது.












Click it and Unblock the Notifications