நான் தீர்வு சொன்னால் சின்ன பையன்னு சொல்லிருவாங்க.. விஜய பிரபாகரன் கலகல!
திமுக ஆட்சிக்கு வந்தாலும் எதுவும் மாறாது என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை: பிரச்சனைகளுக்கு என்னை தீர்வு கேட்டால், என்னை சின்ன பையன் என்று சொல்லுவார்கள், ஆனால் என் கோபம் ஆளும் கட்சிமீதுதான் என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து விஜய பிரபாகரன் தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் சொன்னதாவது:
"எல்லோரையும் முன்னேற்றிவிடும் ஆசிரியர்கள் இன்று கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றினால், வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அவர்கள் கஷ்டப்படும்போது, நாம் மட்டும் புத்தாண்டு கொண்டாடுவது நல்லதல்ல.

நிலைமை மாறவில்லை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நான் சின்ன வயசிலிருந்தே ஆசிரியர்களின் போராட்டத்தை பார்த்து கொண்டிருக்கிறேன். இப்படி பார்த்தே எனக்கு பழகியும் விட்டது. திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் இந்த நிலைமை மாறவில்லை.

ஹைதராபாத் வளர்ச்சி
இனிமேல் திமுக ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைமை மாற போவதும் கிடையாது. ஆனால் ஆசிரியர்கள் கஷ்டப்படுவதை பார்த்தால் மனசு சங்கடமாக இருக்கிறது. கல்வியில் ஹைதராபாத் நன்றாக வளர்ச்சி பெற்றுள்ளபோது, தமிழகம் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கிறது" என்றார்.

நான் சின்ன பையன்
இந்த பிரச்சனைக்கெல்லாம் தேமுதிக சார்பில் என்ன தீர்வு சொல்ல போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய பிரபாகரன், "நான் தீர்வு சொன்னால் என்னை சின்ன பையன் என்று சொல்லுவீர்கள். அதேபோல ஆட்சி மாற வேண்டும் என்று சொன்னாலும் என்னை சுயநலம் என்பார்கள்.

ஆளும் கட்சி
இந்த கேள்வியை இத்தனை வருஷம் ஆட்சியில் இருந்தவர்களைத்தான் நீங்கள் போய் கேட்க வேண்டும். ஆனால் என் குற்றச்சாட்டு திராவிடக் கட்சிகள் மேல் கிடையாது, அது ஆளும் கட்சி மீது தான்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications