குட்கா கம்பெனிகளிடமிருந்து பல கோடிகளை வாங்கி உள்ளார் விஜயபாஸ்கர்.. அதிர்ச்சி தரும் ஐடி ரிப்போர்ட்
சென்னை: குட்கா நிறுவனங்கள், சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனங்களிடம் இருந்து முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பல கோடிகளை பெற்றதற்கான எல்லா ஆதாரங்களும் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.
வருமான வரித்துறை சார்பாக கடந்த ஏப்ரல் 7ம் தேதி 2017 அன்று விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இவருக்கு சொந்தமான குவாரிகளில் அளவுக்கு அதிகமான கற்கள் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் குறையாக கற்கள் எடுத்ததாக கணக்கு காட்டி, அளவிற்கு அதிகமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு வரி கட்டவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது.
இதற்காக டிரோன் மூலம் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருமான வரித்துறை வழக்கும் பதிவு செய்தது. அதேபோல் ஆர். கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

வழக்கு
மேலும் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது அதற்கு பல கோடிகளை இவர் செலவு செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டது. இந்த வழக்கில்தான் வருமான வரித்துறை இவரின் சொத்துக்களை முடக்கியது. 117.46 ஏக்கர் நிலங்களை முடக்கியது. புதுக்கோட்டையில் உள்ள நிலங்கள் ஆகும் இவை, அதேபோல் இவரின் வங்கி கணக்குகளையும் முடக்கியது. இதன் மூலம் 206.42 கோடி ரூபாய் வருமான வரித்துறையுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக விஜயபாஸ்கர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கோரிக்கை என்ன?
நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் தற்போது வருமான வரித்துறை அளித்த பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, குட்கா நிறுவனங்கள், சேகர் ரெட்டியின் எஸ்ஆர்எஸ் மைனிங் நிறுவனங்களிடம் இருந்து இவர் பெரும் தொகையை பெற்றதற்கான எல்லா ஆதாரங்களும் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது. இந்த பதில் மனுவை தொடர்ந்து வழக்கு வரும் டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

பல கோடி பெற்றார்
விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களின்படி, விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்துள்ளார், தனது குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாறைகள் எடுத்துள்ளார், அதற்கு வரி கட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதோடு மேலும் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடம் இருந்து இவர் 85.46 கோடி ரூபாயை பெற்றுள்ளார், குட்கா நிறுவனங்களிடம் இருந்து இவர் 2.45 கோடி ரூபாய் பெற்றுள்ளார். கூவத்தூரில் தங்கி இருந்த போது இவர் 30 லட்சம் செலவு செய்துள்ளார். அதற்கான வருமானம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

பின்னணி
தனது குவாரி மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாறைகள் எடுத்து, அதில் வரி ஏமாற்றி, பல கோடி லாபம் பார்த்துள்ளார். இந்த வருமானம் தொடர்பாக அவர் கணக்கு காட்டவில்லை. இதற்கான ஆதாரங்கள் அவர் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவருக்கு வரிகளை கொடுக்க பல முறை வாய்ப்பு கொடுத்தோம். ஆனாலும் அவர் அதற்கான வரிகளை அபராதத்துடன் கொடுக்கவில்லை. இதனால் அவர் கணக்குகளை முடக்கினோம்.

வரி பாக்கி
வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் செலுத்தவில்லை என்பதால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிக்க எந்த தடையும் இல்லை எனவும், விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுதான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications