இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்! பசி பட்டினி! சட்டப்பேரவையில் குரல் கொடுத்த விஜயதரணி!
சென்னை: பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் தவிக்கும் தமிழர்களுக்கும் தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி.
அடுத்த நாட்டு பிரச்சனைகளுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி விஜயதரணியை பேச்சை முடிக்குமாறு அறிவுறுத்தினார் சபாநாயகர் அப்பாவு.
ஆனாலும் ஒரு நிமிடம் எனக்கு நேரம் கொடுங்கள் எனக் கூறிக்கொண்டே, தாம் சொல்ல வந்த கருத்துக்களை முழுமையாக பேசிவிட்டு அமர்ந்தார் விஜயதரணி.

சட்டமன்றம்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இலங்கையில் விலை வாசிஉயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவது தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கோரிக்கை விடுத்தார். இலங்கையில் பால் ஒரு லிட்டர் இரண்டாயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி மிகுந்த வேதனையாக உள்ளதாக குறிப்பிட்டார்.

விஜயதரணி பேச்சு
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அடுத்த நாட்டு பிரச்சனையை பற்றி இங்கே பேச வேண்டாம் என்றும் அதைப் பற்றி நாம் பேசி அதற்கு இங்கு தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் நேரமின்மை காரணமாக பேச்சை விரைந்து முடித்துக்கொள்ளுமாறு விஜயதரணியிடம் சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனால் ஒரு நிமிடம் எனக்கு நேரம் கொடுங்கள் எனக் கூறிக்கொண்டே, தாம் சொல்ல வந்த கருத்துக்களை முழுமையாக பேசிவிட்டு அமர்ந்தார் விஜயதரணி.

அரசு உதவவேண்டும்
அதேபோல் உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்ட விவகாரத்தில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டதாக கூறி பாராட்டு தெரிவித்தார். உக்ரைன் விவகாரத்தை எப்படி சிறப்பாக கையாண்டதோ அதேபோல் இலங்கையில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதிலும் அரசு உதவி புரிய வேண்டும் எனக் கூறினார்.

பேரவையில் சிரிப்பொலி
மீண்டும் மீண்டும் இலங்கை தமிழர்கள் குறித்து விஜயதரணி பேசியதால், குறுக்கிட்ட சபாநயகர் அப்பாவு, உங்கள் கோரிக்கையை ஒரே வரியில் கூறுங்கள் என்றும் தாம் சொல்வதை புரிந்துகொண்டு அமருமாறும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் விஜயதரணி விடாமல் பேசியதால் பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.












Click it and Unblock the Notifications