வீடா? இது அரண்மனையா? விஜயகாந்த் கட்டி வந்த கனவு இல்லம்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் மிகப் பிரம்மாண்டமாக ஒரு வீட்டைக் கட்டி வந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாத காலம் ஆகிறது. அவரது மறைவை ஒட்டி அவர் குறித்த பல்வேறு செய்திகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் அவர், அரண்மனையைப் போல ஒரு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை போரூரிலிருந்து பூந்தமல்லி போகும் நெடுஞ்சாலையில் உள்ளது காட்டுப்பாக்கம். இந்தப் பகுதியில்தான் விஜயகாந்த் 2013இல் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டுள்ளார். இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இந்த வீட்டின் வேலை 50%தான் முடிந்துள்ளது.

காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் 2வது பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த வீடு, அரண்மனையைப் போலப் படு பிரம்மாண்டமாக இருக்கிறது. இது வீட்டின் முகப்பு ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக இருக்கிறது.
அத்துடன் இரண்டு மாடிக்கும் சேர்த்து ஒரே முகப்பு போல அமைத்துள்ளன. இதனால் பார்க்கும்போது இந்த வீடு 5 அடுக்கு போலத் தெரியவில்லை.

இந்த வீடு மொத்தமாக 20 ஆயிரம் சதுர அடி அளவுக்கு விஸ்தாரமாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் தற்போதுவரை நடைபெற்று வருகின்றன.
இந்த வீட்டின் நுழைவுவாயில் உள்ளே போய் நின்றால் மனிதர்கள் எல்லாம் குட்டிக் குட்டியாகத் தெரிகிறார்கள். அந்தளவுக்கு ஒரு சினிமா பேலஸ் போல உள்ளது இதன் உயரம்.

வீட்டின் முகப்பு முழுக்க சந்தன நிறத்தில் மார்பல்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. வீடு முழுக்கவே இப்படி மார்பல்ஸ் கற்களால் இழைக்கப்பட்டு வருகின்றது. இவ்வளவு வேலைகள் நடைபெற்று முடியும் வரை மின் இணைப்பே இல்லாமல் தான் இருந்துள்ளது.
கடந்த 2 வாரம் முன்னர் தான் மின் இணைப்பு இந்த வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் வேலைகளை முழுமையடையக் குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் வரை ஆகும் என இங்கே உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் இத்தனை ஆண்டுகளாக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மிக எளிமையானது. ஒரு அரசியல் தலைவரின் வீடு போலவோ அல்லது சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரத்தின் வீடுபோலவே இருக்காது.
அதை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றபோது உலகமே பார்த்தது. 50 பேர் வீட்டு முன்னால் குழுமினாலே அந்த இடம் நெருக்கடியாக மாறிவிடும். அதேபோல் வீட்டுக்குள் ஒரே நேரத்தில் ஒரு பத்துபேர் சென்றால் அவ்வளவுதான். அந்தளவுக்கு மிக எளிமையான வீடு.

ஆனால், அவரது அரசியல் வாழ்க்கையை விஜயகாந்த் தொடங்கும் வரை இந்தே வீடே தனக்குப் போதும் என்ற மனநிலையில்தான் அவர் வாழ்ந்தார். அதன்பின்னர் அவரது கல்யாண மண்டபமும் உடைக்கப்பட்டது. அதுவும் கால்வாசி அளவுக்குச் சுருங்கி விட்டது.
சொல்லப்போனால், அதற்கு முன் சென்னை பிரதான பகுதிக்குள் இருந்த மிகப் பிரம்மாண்ட கல்யாண மண்டபம் என்றால் அது விஜயகாந்த் மண்டபம்தான். அரசியல் சதியால் அதை அவர் இழந்தார் எனப் புகார் அப்போது அவரது விசுவாசிகளால் எழுப்பப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில்தான் தங்களுக்கு மிகப் பெரிய வீடு ஒன்று தேவை என்பதை விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா புரியவைத்தார். இந்த வீட்டின் வேலைகள் தொடங்கிய சில வருடங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதனால் இதன் வேலைகள் தடைப்பட்டன. கிட்டத்தட்ட அவர் 10 ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

கூடவே அவரது பொருளாதார நிலையும் மோசமாகி இருக்கிறது. வெளிநாட்டில் சிகிச்சை, பல ஆண்டுகளாக நடிக்காமலிருந்தது, அரசியல் கட்சியை நிர்வகிப்பதற்கான பணத் தேவை எனப் பல வழிகளில் அவருக்குப் பிரச்சினை இருந்துள்ளது.
வீட்டு வேலைகளுக்கான செலவுகளும் இத்தனை ஆண்டுகள் ஆனதால், பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் நிலைமையைச் சமாளிக்கத் தனது சொத்துகளை அவர் அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அடமானம் இருந்த சொத்துகளுக்கு ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஏலம் விடப்படும் அளவுக்குச் சென்றதாக இங்குள்ள அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

ஒரு கட்டத்திற்குப் பின்னர் தான் இதை மீட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்கள் உறுதியானதான எனத் தெரியவில்லை. விசாரித்த அளவில் இப்பகுதி வாசிகள் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.
இந்த வீட்டிற்குள் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே குடியேறிவிட வேண்டும் என விரும்பி இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
ஆனால், அவரது கணவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது என்பதை உணர்ந்த குடும்பத்தார் கடந்த ஒரு மாதம் முன்னதாகவே விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே சம்பிரதாயமாக வந்து பால் காய்ச்சி விட்டுச் சென்றுள்ளனர்.

அதற்குக்கூட விஜயகாந்த் வரவில்லை. உறவினர்கள்கூட வரவில்லை. மிக எளிமையாக அந்தச் சடங்கு நடந்துள்ளது.
இந்த வீட்டிற்கு விஜயகாந்த் கடந்த 2018 இறுதியில் அல்லது 2019 இல் வந்துள்ளார். அதற்குப் பின்னர் அவர் வரவே இல்லை. இப்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் அதுவே கடைசி வருகையாக அமைந்துவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வீட்டின் வேலைகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications