பிரேமலதா கட்டுப்பாட்டில் விஜயகாந்த்? 30 வருட கேப்டன் டிரைவர் சொன்ன உண்மை!
சென்னை: விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பலரும் மவுனத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படித்தான் வெங்கடேஷ். இவர் விஜயகாந்த்திடம் 30 வருடங்களுக்கு மேலாக டிரைவராக இருந்தவர். அத்துடன் கூடவே இருந்தவர். விஜயகாந்த்தை அதிகம் அறிந்தவர். தனது முதலாளி பற்றி அவர் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்.

ஆஃப் லைனில் இருந்தவர் ஆன் த கேமிரா முன் வந்திருக்கிறார். 'ஒருநாள் கூட அவர் என்னை வேலைக்காரனாக நினைத்துப் பேசியதே கிடையாது. அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.
ஹோட்டல் ரூம்களில் தங்கி இருந்தபோது கூட என்னைத் தரையில் படுக்க விடமாட்டார். அவருடன் ஷோபாவில் தான் படுக்க அனுமதிப்பார். அவர்தான் என்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஒருநாள் கூட நான் இது வேண்டும் என்று அவரிடம் கேட்டதில்லை. அவரே பார்த்துப் பார்த்து என்னைக் கவனித்துக் கொண்டார்" என்கிறார் வெங்கடேஷ்.
அது மட்டுமல்ல; இன்னும் பல விசயங்களைப் பேசி இருக்கிறார். அவரே சொல்கிறார் படியுங்கள்.

"நான் முதன்முதலாக இப்ராஹிம் ராவுத்தர் மூலமாகத்தான் விஜயகாந்த்தைச் சந்தித்தேன். அவர்தான் என்னை டிரைவராக வேலைக்குச் சேர்த்தார். சென்னையில்தான் வேலையில் சேர்ந்தேன். அவர்தான் விஜயகாந்த்திடம் சொல்லி என்னை அவரது டிரைவராக இருக்கச் சொன்னார்.
அப்போது விஜயகாந்த், 'என்னோட டேஸ்ட்டுக்கு தகுந்த மாதிரி இவர் ஓட்டுவாரா? நான் பார்க்க வேண்டாமா?' எனக் கேட்டார். அதற்கு ராவுத்தர், 'உன் டேஸ்ட் எனக்குத் தெரியும்.
இவன் நல்லா ஓட்டுவான். நான் சொல்கிறேன் வைத்துக்கொள்' என்றார். அன்று முதல் 30 வருடங்களாக நான் தான் விஜயகாந்த் டிரைவர்" என்றபடி பேசத் தொடங்குகிறார் வெங்கடேஷ்.

"நானும் கேப்டனும் முதன்முதலாக காரில் போனது மீனாட்சி திருவிளையாடல் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குதான். இந்தப் படத்தை கே.சங்கர் இயக்கினார். இதன் ஷுட்டிங் விஜிபி பீச்சில் நடந்தது.
இந்தப் படம் 1989இல் வெளியானது. போகும்போதே கேப்டன், 'தம்பி வேகமாக ஓட்ட வேண்டும்' என்றார். நான் டிரைவர் மட்டும் இல்லை. மெக்கானிக்கும் கூட. ஆகவே, அடித்துத் தூக்கி வண்டியை ஓட்டினேன். அவருக்கு அது பிடித்துவிட்டது.
மேக் அப் ரூம் உள்ளே சென்றதும், ராவுத்தருக்கு போன்போட்டார். 'சூப்பர் பையன்டா. நான் இவனையே வைத்துக் கொள்கிறேன்' என்றார். அன்று தொடங்கியது அவருடனான பயணம்.
அவர் முதன்முதலாக வைத்திருந்தது வண்டி TMM2. அதுதான் அவருக்குப் பிடித்ததும் அதுதான். இப்போது வரை அதை பழுது நீக்கி வைத்திருக்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா கொடுத்த வேன். அத்தைதான் அவர் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தார். கேப்டனுக்கு புல்லட் ரைய்டு பண்ணப் பிடிக்கும். மதுரையில் இருக்கும்போதே புல்லட் வைத்திருந்தார்.

அதன் முன்னால் இரண்டு நாய் பொம்மைகள் உட்கார்ந்திருக்கும். அவருக்கு நாய்கள் மீது அவ்வளவு பிரியம். வீட்டில் கூட நிறைய நாய்கள் வளர்த்தார். அவரது மகனுக்கும் நாய்கள் மீது பிரியம் அதிகம்.
என்னைவிட வேகமாக கார் ஓட்டுவார் கேப்டன். அவரும் நடிகர் ராதாரவியும் சேலம் டு கோயம்புத்தூர் ரைய்டு பண்ணுவார்கள். அப்போது எல்லாம் என்னை பின்னால் உட்காரவைத்துவிடுவார். எனக்குப் பயமாக இருக்கும்.

அவர் வண்டி ஓட்டும்போது பயப்படக் கூடாது என்பார். வண்டி போனாலும் பரவாயில்லை. நம்ம பாதுகாப்புதான் முக்கியம். ஆகவே, வண்டிக்கு அடிப்பட்டுவிடும் என்று பயப்படாதே என்பார்" என்கிறார் வெங்கடேஷ்
அவரிடம் விஜயகாந்த் மதுப்பழக்கம் பற்றிக் கேட்டதற்கு, "உலகத்தில் குடிக்காத மனிதர் யார் உண்டு. அவர் மிகக் கடுமையாகச் சண்டைக்காட்சிகள் செய்வார். அவரைப் போலக் கடினமான சண்டைக்காட்சிகளில் ஈடுபடும் நடிகர்கள் யாருமே இல்லை. டூப் கூட போடமாட்டார். அவருக்கு மதுப்பழக்கம் இருந்து.
ஆனால், இவர்கள் சொல்வதைப் போல் அவர் அடிமையாக இல்லை. அப்படிச் சொல்வர் கள் அவரை அறியாதவர்கள். தெரியாதவர்கள். ஏதேதோ உளறுகிறார்கள். அதில் உண்மை இல்லை.

காலையிலேயே எழுந்த உடன் உடற்பயிற்சி செய்வார். அதை எப்போதும் அவர் விட்டது இல்லை. அவரது காலைப் பிடித்துத் தூக்கச் சொல்வார். அதை நெற்றிவரை கொண்டுவந்து தொடுவார். அப்படிச் செய்வது கடினம். அந்தளவுக்குப் பயிற்சி செய்ததால்தான் காலை வைத்து அவரால் அப்படி சண்டைக்காட்சிகளில் நடிக்க முடிந்தது" என்றவரிடம் ராவுத்தர் பிரிவு ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "கல்யாணத்திற்கு முன்புவரை எங்களுக்குச் சம்பளம் கொடுப்பது, வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது எல்லாம் ராவுத்தர்தான் செய்தார். கல்யாணத்திற்குப் பின் அண்ணி வந்துவிட்டார்.
ஆகவே, அவர் பல விசயங்களைக் கவனிக்கத் தொடங்கினார். அப்படித்தானே எல்லோர் வீட்டிலும் நடக்கும். அதுதான் கேப்டன் வீட்டிலும் நடந்தது. இதில் ஒரு புதுமையும் இல்லை.
அந்த மாற்றம் வந்த பிறகு ராவுத்தர் விலகல் உருவானது. திருமணத்திற்கு முன் கேப்டனை ரவுத்தார் எப்படிப் பார்த்துக் கொண்டாரோ அதைப்போல பின்னால் அண்ணி பார்த்துக் கொண்டார். அதுதானே இயற்கை" என்கிறார் வெங்கடேஷ்.












Click it and Unblock the Notifications