எங்க வந்து செல்பி எடுக்குற! டிடிஎஃப் வாசன் அலப்பறையால் விஜயகாந்த் ரசிகர் கோபம்.. எஸ்ஸான மஞ்சள் வீரன்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த டிடிஎஃப் வாசனுடன் ரசிகர்கள் செல்பி எடுத்ததை பார்த்த தொண்டர் ஒருவர் அவர்களை விரட்டி அடித்த காட்சி பெரும் வைரலாகி வருகிறது.
கேப்டன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடிப்பிலும் அரசியலிலும் நேரடியாக ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாத நிலையில் அவருடைய கால்களில் விரல்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து அவ்வப்போது விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதும், அவர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆவதும் வாடிக்கையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விஜயகாந்துக்கு காய்ச்சல், சளி, இருமல் தொல்லையால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் மூச்சுதிணறலும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார். அவரது மறைவால் திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது உடல் அடுத்த நாள் 29ஆம் தேதி தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் மக்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் டிடிஎஃப் வாசன் உள்பட மஞ்சள் வீரன் குழுவினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வெளியே வந்த டிடிஎஃப் வாசனை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர். இதை அங்கிருந்தபடியே விஜயகாந்தின் ரசிகர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
உடனே கடுங்கோபமடைந்த அவர், செல்பி எடுக்குற இடமா இது, யாரா இருந்தாலும் அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க என கத்தினார். இதை பார்த்ததும் டிடிஎப் வாசன் ஒன்றும் தெரியாதது போல் ஷூ வை மாட்டிக் கொண்டு அங்கிருந்து நழுவினார்.












Click it and Unblock the Notifications