3 முறை தேர்தலில் சீட் தந்த விஜயகாந்த்! நன்றி மறக்காத மீசை ராஜேந்திரன்! MD டாக்டருக்கு படிக்கும் மகன்
சென்னை: கடந்த 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் மறைந்த விஜயகாந்தின் உடலை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்த நடிகர் மீசை ராஜேந்திரனுக்கும் தேமுதிகவுக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடிகர் மீசை ராஜேந்திரன் இளம் பருவம் முதலே விஜயகாந்தின் தீவிர ரசிகர். சினிமா தியேட்டர் கூட நடத்தியிருக்கிறார். நடிப்பு மீது கொண்ட மோகம் காரணமாக சென்னை வந்த மீசை ராஜேந்திரனுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு விஜயகாந்த் தான் ரமணா திரைப்படத்தில் வாய்ப்பு வழங்கி அவரை லைம்லைட்டிற்குள் கொண்டு வந்தார். இதனால் தான் இன்று வரை விஜயகாந்த் மீது நன்றி மறக்காத மனிதராக மீசை ராஜேந்திரன் உள்ளார்.

பார்ப்பதற்கு மிரட்சியான தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் ராஜேந்திரநாத், விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியவுடன் அதில் உறுப்பினராக இணைந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு 8,800 ஓட்டுக்கள் வாங்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சிப்பணிகளில் இன்னும் தீவிரமாக இயங்கத் தொடங்கிய அவருக்கு இளைஞரணியில் மாநில அளவிலான பதவியை வழங்கினார் விஜயகாந்த். கடந்த 2011ல் அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை. மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஏழாயிரத்து சொச்சம் ஓட்டுகள் பெற்றார். 2021லும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் மனம் துவளாமல் கடைசி வரை விஜயகாந்துடன் நின்றார் மீசை ராஜேந்திரன்.
இதனிடையே மீசை ராஜேந்திரனின் மகன் 6 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.பி.பி.எஸ். படிக்க சேர்ந்த போது விஜயகாந்த் ஓரளவு பேசிக்கொண்டிருந்தார். அப்போது மீசை ராஜேந்திரன் மகனிடம், ''எங்கே வேண்டுமானாலும் போய் படி, என்ன வேண்டுமானாலும் படி, ஆனால் தமிழ்நாட்டில் தான் உனது சேவை இருக்கணும், ஏழை எளியோரிடம் காசு பணம் எதிர்பார்க்காமல் சிகிச்சை தரணும்'' என அட்வைஸ் அளித்திருக்கிறார் விஜயகாந்த்.
மீசை ராஜேந்திரன் மகன் எம்.பி.பி.எஸ். படித்ததோடு மட்டுமல்லாமல் நீட் தேர்விலும் பாஸாகி இப்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் கோவையில் மகனுக்கு எம்.டி. டாக்டருக்கு படிக்க அட்மிஷன் கிடைத்ததும் முதல் தகவலை பிரேமலதாவிடம் சொல்லி விஜயகாந்திடம் தனது மகன் வாழ்த்து பெற வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் மீசை ராஜேந்திரன். படிப்பு விஷயம் என்பதால் மறுப்பேதும் சொல்லாத பிரேமலதா, மகனை அழைத்து வாருங்கள் என மீசை ராஜேந்திரனுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். அது தான் விஜயகாந்தை தாம் கடைசியாக பார்த்த நிகழ்வு என மீசை ராஜேந்திரன் இப்போது உருக்கத்துடன் தெரிவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications