உடல்நலிவுற்ற நிலையிலும் தண்ணீர் பந்தலை மறக்காத விஜயகாந்த்! தேமுதிக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்!
சென்னை: உடல்நலமின்மையால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையிலும் தண்ணீர் பந்தலை மறக்காமல் மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;
கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிப்பதற்கு தேமுதிக சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும்.

ஆண்டு தோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம்.
அதே போல் வருகிற 5-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே எத்தனை நிர்வாகிகள் விஜயகாந்தின் வேண்டுகோளை ஏற்று தண்ணீர் பந்தல் திறக்கிறார்கள் என்பதை வரும் 5ஆம் தேதி அறிந்துகொள்ளலாம்.
ஏற்கனவே பல நிர்வாகிகள் பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவித்து வருவதால் விஜயகாந்தின் வேண்டுகோளை அவர்கள் முழுமையாக செயல்படுத்துவது கேள்விக்குறி தான்.












Click it and Unblock the Notifications