நான் பிரச்சாரத்துக்கு வருகிறேன்... விஜயகாந்த் விசுவாசிகளை உற்சாகப்படுத்திய விஜய பிரபாகரன்..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரத்துக்கு தயாராகிவிட்டார் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.
தனது தந்தையின் விசுவாசிகளும், தொண்டர்களும் சோர்வடைந்திருப்பதை அறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் வகையில் தனது பிரச்சார பயணத்தை அமைத்துக்கொள்ள உள்ளார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
மாவட்டத்திற்கு ஒரு நாள் வீதம் அவர் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சி
அக்டோபர் 4 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தேமுதிக மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து சென்னையில் உள்ள தலைமைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பக் கட்டணம்
இதுமட்டுமல்லாமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ரூ.2,000 கட்டணமும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ரூ.4,000 கட்டணமும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தலைமை எதிர்பார்த்த அளவுக்கு விருப்பமனுக்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் இதனை நாசூக்காக கையாண்டு வேட்பாளர்களை தயார் செய்து வருகிறார்களாம்.
விஜய பிரபாகரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருப்பதால் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சாரத்துக்கு செல்வதில்லை. எல்.கே.சுதீஷும், பிரேமலதா விஜயகாந்தும் தான் பிரச்சாரங்களுக்கு சென்று வந்தார்கள். அவர்களுக்கு உதவியாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரனும் பரப்புரையில் ஈடுபட்டார். கட்சியினரை முறுக்கேற்றும் வகையில் விஜய பிரபாகரன் பேசினாலும் அது சட்டமன்றத் தேர்தலில் துளியும் கைகொடுக்கவில்லை.
சோர்வு
தேமுதிகவின் தோல்வி அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விரக்திக்கொள்ளச் செய்துவிட்டது. இந்நிலையில் மாவட்ட வாரியாக கட்சியினரை சந்தித்து பேசுவது குறித்து ஆலோசித்து வந்த விஜயபிரபாகரன், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். காஞ்சிபுரத்தில் தொடங்கி தென்காசி வரை தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் தாமே நேரடியாக சென்று பிரச்சாரம் செய்வதுடன் தேர்தல் பணிகள் எப்படி போகிறது என்பதையும் ஆய்வு செய்யவுள்ளார்.