தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்..ஊழலுக்கு வழி.. அரசு கைவிட விஜயகாந்த் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை 13,331 காலிபணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் கல்வி நலன் கருதி, இந்த கல்வியாண்டில், 13,331 காலிபணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க முடிவு செய்து, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மை குழுவிற்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியில் பணியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் அரசு பள்ளிகளில் காலிபணியிடம் எவ்வாறு அறிந்துகொள்வது, நியமனம் எவ்வாறு நடைபெறும், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பல கேள்விகள் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜயகாந்த்
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

காத்திருக்கும் பட்டதாரிகள்
2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்
இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.

ஊழலுக்கு வழிவகை
இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த பிள்ளைகளின் கல்வித்தரம் காப்பதற்கான வாய்ப்பாக இது அமையும். ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications