முதல்வராகியிருந்தால் விஜயகாந்த் என்னென்ன செய்திருப்பார் தெரியுமா? தமிழகமே ஃபாரீனாகியிருக்கும்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராகியிருந்தால் தமிழகத்தையே ஃபாரீனாக மாற்றியிருந்திருப்பாராம். அவருடைய தொலைநோக்கு திட்டம் என்ன தெரியுமா?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார், அவருடைய இறப்பை இன்று வரை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. யாருடைய பொல்லாப்பையும் சம்பாதிக்காதவர்.

நிறைய நன்மைகளை செய்துள்ளார். அவர் இருக்கும் போது செய்த நன்மைகளில் நமக்கு தெரிந்தது கொஞ்சம்தான். ஆனால் அவர் மரணத்திற்கு பிறகு நிறைய பேர் கேப்டன் எனக்கு அதை செய்தார், இதை செய்தார் என கூறி வருகிறார்கள். இதை பார்க்கும் போது உழைத்து சம்பாதித்த காசில் இத்தனை அளவுக்கு செய்துள்ளாரே என மிரள வைக்கிறது.
இப்படிப்பட்ட விஜயகாந்த் தமிழகத்தின் முதல்வராக வந்திருந்தால் என்னென்ன செய்திருப்பார் , அதாவது அரசு பணத்தில் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவமனை எல்லாம் இலவசமாக செய்து கொடுப்போம். ஏழை, பணக்காரனுக்கு என தனித்தனியே இல்லாமல் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் அளவுக்கு கல்வித் தரத்தை உயர்த்துவோம் என்றார்.
அது போல் அமேசான் உள்ளிட்ட ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எங்கெங்கிருந்தோ பொருட்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் போது அரசால் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்க முடியாதா என்ன என விஜயகாந்த் கேட்டுள்ளார். எனவே தேமுதிக ஆட்சி அமைத்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காலத்தின் கோலமோ நம் துரதிருஷ்டவசமோ தெரியவில்லை விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பால் காலமானார். அவர் குறித்து கலா மாஸ்டர் இந்தியா கிளிட்ஸ் எனும் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜயகாந்த் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறுகையில் விஜயகாந்த் ஊர்வலத்தில் கருடன் சுற்றிய நிகழ்வு என்பது அரிதான ஒன்று.
இது அபூர்வம் என்று காளிகாம்பாள் கோயில் பூசாரியும் என்னிடம் சொன்னார். விஜயகாந்த் நடிகர் அரசியல் கட்சி தலைவர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். எப்போது பார்த்தாலும் கேரவனை பயன்படுத்தவே மாட்டார். டான்ஸ் கலைஞர்கள் மீது அன்பு அதிகம். அவர்கள் உடல் முழுவதும் அசைவுகளை கொடுக்கிறார்களே என்பார். இதனால் அவர்களை கேரவனில் ஓய்வெடுக்குமாறு கூறுவார்.
அது போல் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் என எல்லாரையும் சிங்கப்பூருக்கு பேருந்தில் அழைத்து சென்றார். ஆனால் என்னையும் எனது உதவியாளர்கள், நடன கலைஞர்களை விமானத்தில் அனுப்பி வைத்தார். வேண்டாம் நாங்களும் பேருந்தில் வருகிறோம் என சொல்லியுள்ளோம் கேட்கவில்லை. டான்ஸ் ஆடுவோர் கஷ்டப்படக் கூடாது என கருதுவார்.
அவரது ஏலே இமயமலை எங்க ஊர் சாமி மலை என்ற பாடல் கொரியோகிராப் செய்த போது அரசியலுக்கு வந்து என்ன சார் செய்ய போறீங்க என கேட்டேன். அதற்கு அவர் மாஸ்டர் தமிழகத்தில் குடிசைகளே இருக்கக் கூடாது. அவற்றை எல்லாம் மாடிகளாக்க வேண்டும். தமிழகம் ஒரு ஃபாரீன் போல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார். அவருக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் அதை நிச்சயம் செய்திருப்பார் என கலா மாஸ்டர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications