வடிவேலு அப்படி பேசியும்.. விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான விஷயம்.. காமெடி நடிகர் வெளியிட்ட தகவல்!
சென்னை: நடிகர் வடிவேலு, விஜயகாந்த்தை கடுமையாக தாக்கிப் பேசியபோதும், விஜயகாந்த், வடிவேலுவை தொடர்ந்து படங்களில் நடிக்குமாறு கூறியதாக நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் அண்மையில் கூறினார்.
தமிழ் திரையுலகில் விஜயகாந்த் கொடி கட்டிப் பறந்த சமயத்தில், வடிவேலுவுக்கு பல படங்களில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் வடிவேலு இடையே நல்ல நட்பு இருந்து வந்த சூழலில், ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் பிறகு இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவே இல்லை. விஜயகாந்த் வீடு எதிரிலேயே வடிவேலு வசித்த நிலையில், ஒரு துக்க நிகழ்வின் போது வண்டி நிறுத்துவதில் ஏற்பட்ட மோதலில், விஜயகாந்தின் உறவினர்கள் சிலர் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

வைகைப்புயல் வடிவேலுவை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராஜ்கிரணே சினிமாவில் நடிக்க வந்ததற்கு காரணமானவர் சுப்புராஜ். 'என் ராசாவின் மனசிலே' படத்திற்கு அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய சுப்புராஜ் தான் அந்தப் படத்தில் ராஜ்கிரணை நடிக்க வைக்கும் யோசனையைச் சொன்னவர். மருதமலை படத்திற்கு பிறகு 'சாரப்பாம்பு' சுப்புராஜ் என அடைமொழி வைத்துக்கொண்டார். சுமார் 50 படங்களுக்கு அசோசியேட்டாக இருந்தவர்.
வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ள சுப்புராஜ், பெரும்பாலான நகைச்சுவை காட்சிகளுக்கு ட்ராக் எழுதியவர். விஜயகாந்த்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரங்களில் பேசியதால், அவரை விட்டு விலகினார் சுப்புராஜ். எனக்கு சோறு போட்ட கடவுள் விஜயகாந்த், அவரை திட்டிய வடிவேலுவுடன் என்னால் இருக்க முடியாது எனக் கிளம்பிவிட்டார் சுப்புராஜ்.
அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய சாரப்பாம்பு சுப்புராஜ் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். "எங்க அண்ணன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நேரத்தில் வடிவேலு அவரை பயங்கரமாக திட்டி பேசினார். ஒருநாள் நான் விஜய் வீட்டருகே போய் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கேப்டன் விஜயகாந்த் கார் திடீரென என் மீது மோதும் வகையில் வந்தது. நான் யார்ரா அது என திரும்பி பார்த்தா கேப்டன் கார்ல இருந்தாரு. டேய் இங்க வாடானு என்னைக் கூப்பிட்டார்.
நான் போய் என்னண்ணே எனக் கேட்கவும், வடிவேலுவை நடிக்க சொல்றானு சொன்னாரு. ஏன் ஆள வச்சு அடிக்குறதுக்கானு கேட்டேன். அதற்கு அவர், இல்லடா அவன் காமெடி தான் நல்லாயிருக்கு. அவனை நடிக்க சொல்லுனு சொன்னார். இதைப்போய் நான் வடிவேலுகிட்ட சொல்லட்டுமானு கேட்டேன். போய் சொல்லுனு சொல்லிட்டு கிளம்பிட்டார்.
நான் வடிவேலுவிடம் போய் கேப்டன் என்னிடம் சொன்னதை சொன்னேன். அப்படியானு வடிவேலுவே ஆச்சர்யப்பட்டான். அதுமட்டும் இல்லை, வடிவேலு தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசினாலும், யாரும் அவரை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார நேரத்திலேயே விஜயகாந்த் அனைவரிடமும் கூறி இருந்தார்." எனத் தெரிவித்தார்.
அதேபோல, விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் ஒரு பேட்டியில், "வடிவேலு அவ்வளவு பேசிய பிறகும், அவருக்காக பரிதாபப்பட்டவர் விஜயகாந்த். வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தப்போது, அவர் ஏன் இப்ப நடிக்கிறது இல்ல, வடிவேலு பிறவிக் கலைஞன், அவர் நடித்துக்கொண்டே இருக்கணும், எல்லா தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும் என்று கூறியவர் விஜயகாந்த். தயாரிப்பாளர்களிடம் வடிவேலுவுக்காக ரெக்கமெண்ட் செய்தார்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications