"கூவுதா குக்கர்".. ஈரோடில் கேட்கும் "கொலுசு சத்தம்".. தேமுதிக வந்துட்டாங்க.. கோர்ட்டுக்கு போறாங்களாம்
பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு தந்துள்ளது
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அளவுக்கு அதிகமாக நடப்பதால், தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக புகார் மனு தந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி எழுந்துள்ளது.. இதில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்ய வேண்டும் என்று திமுகவும், மெஜாரிட்டி வாக்கு சதவீதத்தை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று திமுகவும் மும்முரமாகி உள்ளன.
இதற்காக சில "தாராளங்களையும்" தொகுதிக்குள் உலாவ விட்டுள்ளதாக தெரிகிறது.. இது சம்பந்தமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.

குக்கர்கள்
அதாவது, ஆளுங்கட்சி ஓட்டுக்கு 6 ஆயிரம் தர திட்டமிட்டுள்ளதாகவும், தினமும் தலைக்கு 1000 ரூபாய், அசைவ பிரியாணி மற்றும் வீட்டுக்கு ஒரு குக்கர் என்று பட்டப்பகலிலேயே பட்டுவாடா நடக்கிறது என்று அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருவதுடன், அது தொடர்பான வீடியோக்கள் உள்ளதாக கூறி, அவைகளை பரவவிட்டும் வருகின்றனர்.. குறிப்பாக, ஈரோடு கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வீட்டுக்குவீடு திமுகவினர் வெளிப்படையாக குக்கர் கொடுத்து வருவதாகவும் புகார் கிளம்பியது. ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், இந்த வரிசையில் இன்று குக்கர் என்று லிஸ்ட் போட்டு அதிமுகவினர் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

ஸ்வீட் பாக்ஸ்கள்
வாக்காளர்கள் குக்கர் பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாம்... குக்கர் கொடுக்கப்படும் குடோனையும் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.. அதேபோல, அதிமுக தரப்பிலும் "ஸ்வீட்பாக்ஸ்கள்" விநியோகம் ஜரூராக நடப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் அதிமுக தரப்பில் கொலுசு தரப்படுவதாக செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. இதுஒருபக்கம் இருந்தாலும், ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் சிவி சண்முகம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.. நேற்றுகூட ஜெயக்குமாரும் ஒரு புகாரை தந்திருந்தார்.

பணநாயகம்
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம், பிரியாணி தருகிறார்கள்.. பணநாயகத்தைவிட அதிமுக ஜனநாயகத்தைத்தான் நம்புகிறது என்றார்.. இப்படிபலரும் புகார்களை அளித்து வருவதால், இடைத்தேர்தல் நிறுத்தப்படலாம் என்பது போல இணையத்தில் தகவல்களும் பரவின.. அதனால்தான், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதுகுறித்து ஒரு விளக்கம் தந்திருந்தார்.

கொலுசு சத்தம்
இடைத்தேர்தல் தொடர்பாக பல புகார்கள் வந்தாலும் கூட, இதுவரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எந்தவொரு புகாரும் வரவில்லை.. ஆனால், தரப்படும் அனைத்து புகார்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்துகிறோம்.. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார்கள் குறித்தும் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், பணப்பட்டுவாடா நடைபெறுவதால் ஈரோடு கிழக்கு தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓவர் கரைச்சல்கள்
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கில் அதிக அளவில் பணப்பட்டுவடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடப்பதாக சொல்லி, தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி புகார் மனுக்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அண்மையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்தார். இந்த நிலையில், தேமுதிக மனு அளித்துள்ளது.

விஜயகாந்த் கட்சி
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய தேமுதிக வழக்கறிஞர் அணி ஜனார்த்தனன், "இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது ஆதாரங்களுடன் புகார் தந்திருக்கிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றே புகாரை தந்துள்ளோம்.. இந்த ஈரோடு இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால்தான், தேர்தலை நிறுத்த வேண்டும் என்கிறோம். ஒருவேளை இன்று நாங்கள் கொடுத்துள்ள புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications