‘கேப்டன்’ பிரபாகரன் போலீஸ் ட்ரெஸ்! பாதுகாத்து வரும் சலூன் கடைக்காரர்!
சென்னை: 'கேப்டன்' பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த போது பயன்படுத்திய போலீஸ் உடைகளை இன்றும் ஒருவர் பாதுகாத்து வருகிறார்.
சாலிகிராமத்தில் விஜயகாந்த் வீட்டுக்குச் செல்லும் சாலையில் உள்ளது அந்தக் கட்டடம். அதில் தணிகாசலம் என்பவர் ஒரு சலூன் கடையை நடத்தி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக விஜயகாந்த்துக்கு இவர்தான் முடித் திருத்தம் செய்து வந்துள்ளார்.

இந்தக் கடையில் உள்ள மாடியில் விஜயகாந்த், அவரது படங்களில் பயன்படுத்திய அத்தனை உடைகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

யார் இந்தத் தணிகாசலம்?
இவர் திருவண்ணாமலை மாவட்டம் பக்க உள்ள சின்ன கிராமத்திலிருந்து சென்னைக்குக் குடியேறியவர். அங்கிருந்து 15 ஆண்டுகள் முன்னால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் கட்டடத்திற்கு வாடகைக்கு வந்துள்ளார். அங்கேயே ப்யூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

விஜயகாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே சிகை அலங்காரம் செய்து வந்துள்ளார். பெரும்பாலும் அவர் வீட்டுக்குப் போய் தான் செய்வேன் என்கிறார் தணிகாசலம். விஜயகாந்த்துக்குத் தினம் வாக்கிங் போகும் அளவுக்கு உடல்நிலை நன்றாக இருந்த காலத்தில் கடைக்கே வந்து முடித்திருத்தம் செய்து கொண்டுள்ளார்.
"வழக்கமாகப் பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலில் தான் முடிவெட்டுவார். அவர் வரும் போது வாடிக்கையாளர்கள் முன்பே முடி வெட்டிக் கொண்டிருந்தால், கடையில் உள்ளவர்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, பிறகு முடிவெட்டிக் கொண்டு செல்வார்.
எந்த பந்தாவும் இருக்காது. அதைப்போல முடிவெட்டும் போது பொறுமையாக இருப்பார். சத்தம் போடமாட்டார். சாதாரணமான ஹேர் கட் தான். அதில் எந்த மாற்றத்தையும் விரும்ப மாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலே யே தங்கவேண்டிய நிலைமை வந்த பிறகு வீட்டுக்கே சென்று முடிவெட்டத் தொடங்கினேன். அதுவரை அவரே கடையைத் தேடி வந்தார்" என்கிறார் தணிகாசலம்.

சாதாரணமான ஆட்களுக்கு முடிவெட்டினால், 150 வாங்குவோம். அவருக்கு முடிவெட்டினால் 500 ரூபாய் தருவார். வீட்டுக்குப் போய் வெட்டினாலும் அதே ரூபாய் தருவார். கடைக்கு வந்து அவரே வெட்டினாலும் அதே 500 தருவார். நாங்கள் இவ்வளவுதான் என்று கேட்க மாட்டோம்.
"முடிவெட்டும் போது ஊர் அரசியல் நிலவரம் பற்றி விசாரிப்பார். அவர் கட்சி பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பார். தன்னைப் பற்றி, என்ன சொல்கிறார்கள்? குறை என்ன? நிறை என்ன? என்று மக்கள் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றுகூட இல்லை என மக்கள் சொல்வதாகச் சொல்வேன். நல்ல மனிதர் என்று சொல்கிறார்கள் என்று சொல்வேன். உதவும் குணம் பற்றிச் சொல்கிறார்கள் என்று விளக்குவேன். அதை எல்லாம் கேட்டுக் கொள்வார்.
வியாபாரம் எப்படி நடக்கிறது? வருமானம் வருகிறதா? அப்பா, அம்மா ஊரில் எப்படி உள்ளார்கள்? அவருக்கு உதவி செய்கிறேனா? இப்படி என்னைப்பற்றி என் குடும்பத்தைப் பற்றிக் கேட்பார். நானும் சொல்வேன்.

அவருக்கு முடிவெட்ட வீட்டுக்குப் போனாலும் சரி, அவரது மகன்களுக்கு முடிவெட்டச் சென்றாலும் சரி, அனைத்து உபகரணங்களையும் அவர்களே வீட்டில் வாங்கி வைத்திருப்பார்கள். நாங்கள் எதையும் கொண்டு போகத் தேவையில்லை. ஆயில் மசாஜ், பிளீசிங் என எல்லாவற்றுக்கும் வீட்டிலேயே பொருட்கள் இருக்கும். எங்களுக்கு எந்தப் பொருள் செலவும் இல்லை.
மாதம் 2 முறை கட்டிங் செய்து கொள்வார். அதேபோல் வாரம் ஒருமுறை ஷேவிங் செய்து கொள்வார். அதேபோலத்தான் அவர்களின் மகன்களும்.
இந்த கட்டடமே அவருக்குச் சொந்தமானதுதான். நாங்கள் வாடகைக்கு இருக்கிறோம். அதனால், அவருக்கு எங்களுடன் ஒரு நல்ல தொடர்பு உண்டு.
இதே கட்டடத்தில்தான் விஜயகாந்த் உடைகள் தைப்பதற்காகக் கடையும் உள்ளது. நிரந்தரமாகவே 4 ஊழியர்கள் அதற்கு என்று வேலைக்கு உள்ளனர். அவரது படத்திற்குத் தேவையான டிசைனில் என்ன உடை வேண்டுமோ அதை இங்கேயே தைத்து விடுவார்கள்.

விஜயகாந்த் வாழும் வரை அவரை யாரும் கொண்டாடவில்லை. இறந்த பிறகுதான் நிறைய வீடியோக்கள் போடுகிறார்கள். அதை அவர் இருக்கும் போதே செய்திருந்தால் அவர் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். அது தான் வருத்தமாக உள்ளது.
அதேபோல் அவர் இருக்கும் போது மக்களும் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை" என்று வேதனையை வெளிப்படுத்தினார் தணிகாசலம்.

இந்தக் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்த போடு உடுத்திய காக்கிச் சட்டைகள் அப்படியே பத்திரமாக உள்ளன. அதேபோல் அவர் போட்ட கோட் எல்லாம் உள்ளன.
அதில் ஹைலைட் என்னவென்றால், கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் அணிந்த காக்கி சட்டை, போலீஸ் தொப்பி, பெல்ட், ஷூக்கள் என அனைத்தும் அப்படியே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் கட்டடத்தில் மொத்தம் ஆறு கடைகள் உள்ளன. அதற்கு மேலாக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில் இருப்பவர்கள் அனைவரும் விஜயகாந்த் வீட்டில் ஏதேனும் ஒரு வேலைப் பார்ப்பவராக இருக்கிறார்கள். வெளியாட்கள் யாரும் வாடகைக்கு இல்லை" என்கிறார் தணிகாசலம்.












Click it and Unblock the Notifications