விஜயேந்திரா எடியூரப்பாவின் மகனாக பிறந்தது குற்றமா? விமர்சிப்பது நியாயமே இல்லை.. அண்ணாமலை சப்போர்ட்
சென்னை: கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விஜயேந்திராவின் நியமனம் நியாயமான ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. தென்னிந்தியாவில் ஒரே மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியையும் பாஜக, காங்கிரஸிடம் பறிகொடுத்தது. கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நளின் குமார் கட்டீல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய மாநில தலைவர் பதவிக்கு பல தலைவர்கள் போட்டி போட்டனர்.

யாரை தலைவராக நியமிப்பது என கட்சி தலைமை குழப்பத்தில் இருந்தது. இதனால், கிட்டத்தட்ட 6 மாதம் பாஜக தலைவர் பொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில்தான் இந்த மாத துவக்கத்தில், ஒருவழியாக எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் எடியூரப்பா மகனை பாஜக தலைவராக நியமித்ததற்கு அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த சிடி ரவி, இந்த நியமனம் தொடர்பாக எனக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் இந்த கேள்விகளை ஊடகங்களில் பேச முடியாது என வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். மற்றொரு மூத்த தலைவரான சோமண்ணா, பாஜகவை விட்டே விலகி காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பெரிய குற்றமா?: இவர்கள் தவிர சோமண்ணா, பசனகவுடா யத்னால், ரமேஷ் ஜிகஜினகி, சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே ஆகியோரும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இது ஒருபக்கம் என்றால் எதிர்க்கட்சிகளும் பாஜகவை கடுமையாக சாடின. வாரிசு அரசியல் என்று பேசும் பாஜக, தற்போது எடியூரப்பாவின் மகனை நியமித்தது ஏன் என்று கட்டமாக பதிலடி கொடுத்தன. சமூக வலைத்தளங்களிலும் பலரும் விஜயேந்திராவின் நியமனம் பற்றி பல்வேறு கேள்விகளை தொடர்ந்து முன்வைத்தனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டது நியாயமானது என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- எடியூரப்பாவின் மகனாக விஜயேந்திரா பிறந்தது பெரிய குற்றமா என்ன? எடியூரப்பாவின் மகன் தலைவராக நியமனம் என்பது தற்செயல் நிகழ்வு ஆகும்.

நியாயமானது தான்: இதை மட்டுமே வைத்துக் கொண்டு விஜயேந்திராவை விமர்சிப்பது நியாயமற்றது. கர்நாடக மாநில துணைத்தலைவர் உள்பட பல பொறுப்புகளை விஜயேந்திரா வகித்துள்ளார். தான் பொறுப்பு வகித்த நேரத்தில் சிறப்பான முறையில் பாடுபட்டு கட்சிக்கு நற்பெயரை பெற்று கொடுத்துள்ளார். இளைஞர் பாஜகவின் தலைவராக விஜயேந்திரா இருந்துள்ளார்.
அதே நேரம், விஜயேந்திரா நாடு முழுவதும் பயணித்து, மூத்த தலைவர்களுடன் பழகிய அனுபவம் பெற்றவர். எனவே, இந்த அனுபவத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிக்கு பாடுபடுவார். எனவே விஜயேந்திராவின் நியமனம் நியாயமான ஒன்றுதான்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications