விஜய் மாநாடு: சிறப்பு வழிபாடு செய்த பெற்றோர்! டக்கென வந்த கேள்விக்கு சந்திரசேகர் ரியாக்ஷனை பாருங்க!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கொரட்டூர் சாய்பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

தவெக மாநாடு: தவெக மாநாடு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கோவிலில் விஜய்யின் அப்பா, அம்மா வேண்டுதல்: இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு வெற்றி பெற வேண்டி சென்னை கொரட்டூர் சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர். தவெக நிர்வாகிகள் ஏற்பாட்டில் அன்னதானம் போடப்பட்டது.
எஸ்.ஏ.சி பேட்டி: அதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், "வரும் ஞாயிற்றுக்கிழமை தவெக மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற வேண்டும், தவெக தலைவர் விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும், அவர் பெரிய நிலைக்கு வரவேண்டும், தமிழ்நாட்டுக்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கொரட்டூர் பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர்." எனத் தெரிவித்தார்.
சந்திரசேகர் ரியாக்ஷன்: அதைத்தொடர்ந்து, 2026-ல் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக த.வெ.க ஆட்சிக்கு வருமா? என்றும் தவெக கட்சியில் உங்களுக்கு பொறுப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சிரித்தபடி திரும்பிப் பார்த்துவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications