3,000 கிமீ பறந்து.. விஜய்யின் பெரம்பூரில் வாக்களிக்க 2 மகள்களுடன் வந்த தந்தை.. கடைசியில் ஏமாற்றம்
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஓட்டளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வந்தனர். இன்று காலையில் அவர்கள் 3 பேரும் வாக்களிக்க ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு சென்றனர். ஆனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் திருப்பி அனுப்பி வைத்த நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பணி நிமித்தமாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்போர் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். அதேபோல் நம் ஊர்களில் உள்ள மக்களும் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் களமிறங்கி உள்ளார்.
3,000 கிமீ தூரம் பறந்து வந்தும் ஏமாற்றம்
இந்நிலையில் தான் விஜய் களமிறங்கி உள்ள பெரம்பூர் தொகுதியில் ஓட்டளிக்க சிங்கப்பூரில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் விமானத்தில் 3 பேர் பறந்து வந்தனர். செந்தில் குமார் என்பவர் தனது 2 மகளுடன் ஓட்டளிப்பதற்காக பெரம்பூர் வந்தார். இன்று காலையில் ஓட்டளிக்க சென்றபோது அவர்கள் 3 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர்கள் 3 பேராலும் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வெறும் கையோடு போகிறேன்
இதுபற்றி, செந்தில்குமார் கூறுகையில், ''பெரம்பூர் நித்தியானந்த் சாகரைச் சேர்ந்தவர்கள் நாங்கள். அங்கு எனது மனைவி உள்ளார். நானும், 2 மகள்களும் சிங்கப்பூரில் இருக்கிறோம். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க எனது மனைவி எல்லா விஷயத்தையும் செய்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. வீடு மாற்றியபோது ஸ்லீப் மிஸ்ஸாகி உள்ளது. இதனால் ஓட்டுப்போட வந்து வெறும் கையோடு திரும்புகிறோம். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஓட்டுப்போடுவதற்காகவே சிங்கப்பூரில் இருந்து வந்து ஏமாற்றத்துடன் செல்வது கஷ்டமாக தான் இருக்கிறது'' என்றார்.
உரிமை பறிக்கப்பட்டது போல்...
செந்தில்குமாரின் மூத்த மகள் கூறுகையில், ''ஓட்டுப்போட வந்து அதனை செய்ய முடியாமல் செல்வது உண்மையிலேயே ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. நம்முடைய உரிமை பறிக்கப்பட்டது போல் நினைக்கிறோம். எங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க எங்கள் அம்மா அதனைத்து விஷயங்களையும் செய்தார். ஆனால் எங்கள் 3 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை'' என்று வருத்தத்தை பதிவு செய்தார்.
மாற்றத்தை விரும்பினேன் முடியவில்லை
செந்தில் குமாரின் இளையமகள் கூறுகையில், ''முதல் முறை வாக்களிக்கும் ஆர்வத்துடன் நான் வந்தேன். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், ஆதார் அட்டை இருந்தும் கூட எங்களால் ஓட்டுப்போட முடியவில்லை. மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிக்க வந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அடுத்த முறை பார்க்கலாம்'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications