ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து.. தவெகவுக்கு வந்த அழைப்பு! நோ சொன்ன விஜய்.. பின்னணி!
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டி ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தவெக அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்காத நிலையில், தற்போதும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தவெக அறிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்துள்ளன.

ஆளுநர் தேநீர் விருந்து
சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் புறக்கணித்தன. கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
விஜய் கட்சி பங்கேற்கவில்லை
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்துக்கு, ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனால், தவெக தலைவர் விஜய் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான், ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தவெக பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின தேநீர் விருந்துக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தவெக-வை அழைப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. அந்த விருந்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது நினைவு கொள்ளத்தக்கது.
விஜய் புறக்கணித்தது ஏன்?
ஆளுநர் அழைப்பு விடுத்து இருக்கும் தேநீர் விருந்தில் தேமுதிக பங்கேற்கும் என அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் எனத் தெரிகிறது. தவெக தலைவர் விஜய்யை பொறுத்தவரை மத்தியில் ஆளும் பாஜகவை தனது கொள்கை எதிரி எனக் கூறி வருகிறார். அதுபோக, வாக்காளர் பட்டியல் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார்.
இத்தகைய சூழலில்தான் விஜய் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார். ஆளுநர் அழைப்பு விடுது இருந்து தேநீர் விருந்தில் பங்கேற்றால் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் வரும். குறிப்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு அரசியல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் என்பதால், விஜய், புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படும் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications