மாஸ்க் போடலைன்னா.. ஆபிஸர்ஸ் ரூ.25,000 அபராதம் போடுறாங்க.. இது நியாயமா? பொங்கியெழும் விக்கிரமராஜா!
சென்னை: மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் என்று அரசு கூறுகிறது. ஆனால் அதிகாரிகள் வியாபாரிகளிடம் தங்கள் விருப்பம் போல் ரூ.2,000, ரூ.5,000, ரூ.25,000 வரை கூட வசூலிக்கின்றனர். என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி, சலூன்கள் திறக்க அனுமதி இல்லை. பெரிய கடைகள் திறக்க கூடாது, சிறிய கடைகளில் குளிர்சாதன வசதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகள் உள்ளன.

விக்கிரமராஜா பேட்டி
கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு வியாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவை ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது:- ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக பல்வேறு பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து தமிழாக அரசு அரசு ஆலோசனை நடத்துகிறது.

கருத்து கேட்க வேண்டும்
ஆனால் ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும் போதும், கடை திறக்கும் நேரத்தை குறைக்கும் போதும் அதற்கு முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும். இதைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த வாரம் முழு ஊரடங்குக்கு முன்தினம் சனிக்கிழமை மீன், இறைச்சி மார்க்கெட்டுகளில் எந்த அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது என்பதை பார்த்தோம்.

ஊரடங்கால் என்ன பயன்?
அன்றைய தினம் மட்டும் 500 டன் மீன்கள் விற்று தீர்ந்தன. இது கூட்டத்தை சேகரிக்கும் ஊரடங்கு போல் மாறி விட்டது. இதில் ஒரு நாள் ஊரடங்கு போட்டு என்ன பயன்? ஊரடங்கு என்பதே இருக்க கூடாது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதைத்தான் கூறியுள்ளார். இதேபோல் தொடர்ந்து ஊரடங்கு அறிவித்தால் பல வணிகத்துறை முற்றிலும் காணாமல் போய் விடும்.

அதிகாரிகள் வசூல் மழை
ஊரடங்கு கொண்டு வருவதை விட மக்களுக்கும், வியாபரிகளுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறையினருக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.அரசு அதிகாரிகள் வியாபரிகள், மக்களிடம் வசூல் செய்வதைதான் நோக்கமாக கொண்டுள்ளனர். அதிகாரிகள் இதை விட்டு மக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் வெடிக்கும்
மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் என்று அரசு கூறுகிறது. ஆனால் அதிகாரிகள் வியாபாரிகளிடம் தங்கள் விருப்பம் போல் ரூ.2,000, ரூ.5,000, ரூ.25,000 வரை கூட வசூலிக்கின்றனர். இது தவிர கடையையும், ஹோட்டல்களையும் பூட்டி சாவியை எடுத்து செல்கின்றனர். இதற்கு எந்த சட்டத்தில் இடமிருக்கிறது? இதையெல்லாம் அரசு கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரும் போராட்டம் வெடிக்கும். அதிகாரிகளின் சர்வாதிகாரம் தொடர்ந்தால் அவர்களின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்' என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications