"வாக்களித்தால் கை, காலை வெட்டுவோமா?" ஜனநாயகன் படத்திற்கு மதுரை பாப்பாபட்டி கிராமத்தினர் எதிர்ப்பு
மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில், நடிகர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிராக கிராம மக்கள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் கிராமத்தின் வரலாற்றையும், சமூக நல்லிணக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவை பாப்பாபட்டி கிராமத்தின் தேர்தல் வரலாற்றைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பட்டியலின மக்களை மற்ற சமூகத்தினர் துன்புறுத்துவது போன்றும், "வாக்களித்தால் கை, காலை வெட்டுவோம்" என மிரட்டுவது போன்ற வன்முறைச் சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய ஊராட்சிகள் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டபோது, அங்கு நிலவிய சூழலை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்:
ஆரம்ப காலத்தில் அந்த கிராமங்களில் பட்டியலின மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்ததால், தேர்தல் நடைமுறைகளில் சில சிக்கல்கள் நீடித்தன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, கடந்த மூன்று தேர்தல்களாகப் பட்டியலினத்தவர்களே தலைவர்களாகப் போட்டியிட்டு வெற்றிகரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது அங்கு சாதிப்பாகுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், பழைய நிகழ்வுகளைத் திரித்துப் படமாக்கியிருப்பது கிராமத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பாபட்டியின் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகானந்தம் இது குறித்துப் பேசுகையில், தானும் தனது சகோதரரும் சுமார் 15 ஆண்டுகள் அப்பகுதியில் தலைவர்களாக இருந்து அமைதியான முறையில் பணியாற்றியதைச் சுட்டிக் காட்டினார்.
படத்தில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள் ஊரின் எதார்த்த நிலைக்கோ அல்லது உண்மையான வரலாற்றுக்கோ சற்றும் சம்பந்தமில்லாதவை என்றும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கள் கிராமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் காட்சிகளைத் திரைப்படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், படத்தின் நாயகன் விஜய் மற்றும் இயக்குநர் வினோத் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசு தலையிட்டு படக் குழுவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பாப்பாபட்டி கிராமத்தில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதற்றம் நிலவி வருவதால், சமூக வலைதளங்களில் இது பேசுபொருளாக மாறியுள்ளது. ஜனநாயகன் முழு படமும் அண்மையில் இணையத்தில் வெளியானது. அதில் ஒரு காட்சிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications