வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்
சென்னை: பெரம்பூருக்கு பக்கத்து ஏரியாதான் வில்லிவாக்கம். எனவே விஜய்யை ஈஸியா அழைத்து வந்து பரப்புரை செய்து ஜெயித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியை ஆதவ் அர்ஜுனா தேர்ந்தெடுத்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால், இந்த தொகுதியின் களம் வேறு.
ஆலை தொழிலாளர்கள், உழைப்பாளி மக்கள் அதிக அளவில் இருக்கும் தொகுதிதான் வில்லிவாக்கம். இங்கு தொடக்கம் முதல் தொழிலாளி மக்களோடு யார் நிற்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

- 1977 - திமுக
- 1980 - அதிமுக (ஜே.சி.டி பிரபாகரன்)
- 1984 - சிபிஎம்
- 1989 - சிபிஎம்
- 1991 - காங்கிரஸ்
- 1996 - தமிழ் மாநில காங்கிரஸ்
- 2001 - திமுக
- 2006 - திமுக
- 2011 - அதிமுக (ஜே.சி.டி பிரபாகரன்)
- 2016 - திமுக
- 2021 - திமுக
வேட்பாளர்கள் யார்?
இதுதான் தொகுதியின் கடந்த கால நிலவரம். இப்போது திமுக சார்பில் கார்த்திக் மோகனும், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆதவ் அர்ஜுனாவும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் இருக்கின்றனர். இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன், தவெகவில் இணைந்ததற்கு காரணமே வில்லிவாக்கத்தில் போட்டியிடதான். ஆனால், ஆதவ் அதை விரும்பவில்லை. ஏனெனில் சென்னையில் தவெகவுக்கு வாய்ப்பு இருக்கும் இரண்டாவது தொகுதியாக வில்லிவாக்கம் கருதப்பட்டது. எனவே பிரபாகரனை ஓரம் கட்டிவிட்டு ஆதவ் களத்தில் குதித்தார்.
கார்த்திக் மோகன் ஏன்?
ஆதவ் அர்ஜுனாவை திமுகவுக்கு வேலை செய்ய இழுத்து வந்தவர்தான் இந்த கார்த்திக் மோகன். அண்ணா நகரில் இவருக்கு செல்வாக்கு அதிகம். அண்ணா நகருக்கு பக்கத்து ஏரியாதான் வில்லிவாக்கம். எனவே இங்கு அவருக்கு பெரிய அறிமுகம் தேவைப்படாது. மட்டுமல்லாது, ஆதவ் எப்படி காய் நகர்த்துவார்? அதை எப்படி சரி கட்டி ஏறி அடிக்கலாம் என்பது கார்த்திக் மோகனுக்கு தெரியும். எனவே இதையெல்லாம் கணக்கு செய்துதான் கட்சி தலைமை, இவரை இறக்கியிருக்கிறது.
களம் எப்படி இருக்கிறது?
வில்லிவாக்கத்தில் திமுகவின் வெற்றிக்கு கை கொடுக்க, தோழமை கட்சிகளும் வலுவாக இருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டவை கிளை அளவில் பலமாக இருக்கும் தொகுதி இது. எனவே திமுக வெற்றிக்காக இக்கட்சிகள் நிச்சயம் வேலை செய்யும். இதன் மூலம் களம் திமுகவுக்கு சாதகமாக மாற வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல புதியதாக திறக்கப்பட்ட மீன் மார்க்கெட், அகத்தியர் நகர் பெண்கள் உடற்பயிற்சி கூடம், திறக்கப்பட உள்ள வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் இதெல்லாம் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
விமர்சனங்கள் உண்டா?
இவ்வளவு இருந்தாலும் லேசான விமர்சனங்கள் திமுக மீது இருக்கத்தான் செய்கின்றன. மெட்ரோ பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்யாதது, மாலை நேரங்களில் பாடி பாலத்தை கடக்க முடியாத அளவுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல், கண்ணாடி பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள், மல்லிகைசேரி குடியிருப்பு அப்புறப்படுத்தும் விவகாரம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications