வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருப்பதால், இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது. ஆனால், இது திமுகவின் கோட்டை. இருப்பினும் தொகுதியின் பிரச்சனைகள் களத்தின் போக்கையே மாற்றும் என்று சொல்லப்படுகிறது.
வில்லிவாக்கத்தில் திமுக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக 5 முறை ஜெயித்திருக்கிறது. இப்படி இருக்கையில் தொகுதி பிரச்சனைகள் வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வில்லிவாக்கத்தை இரண்டு பகுதியாக பிரித்துவிடலாம். ஒன்று வில்லிவாக்கம் இன்னொன்று அயனாவரம். இதில் வில்லிவாக்கம் நன்றாக டெவலப் ஆகியிருக்கிறது. ஆனால், அயனாவரம் அப்படி கிடையாது. இங்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. அயனாவரம் மார்கெட் பகுதி நெரிசல் மிகுந்த இடம். இந்த பகுதியை சீரமைத்து தர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
அதேபோல, கழிவுநீர் வடிகால் வசதிகள் மற்றொரு முக்கியமான பிரச்சனை. இங்குள்ள கழிவுநீர் கால்வாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அப்போது இருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த சைஸில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. அதேபோல குடியிருப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீருடன் கலப்பதால் மாநகராட்சி குடிநீரை முழுமையாக நம்பி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் பெய்த மழை காரணமாக அயனாவரத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. மழை நின்ற பின்னரும் கூட, வெள்ளம் வடிய 2 நாட்களுக்கும் மேல் ஆனது. இந்தகாலங்களில் கழிவுநீர் கால்வாய்கள் லீக் ஆகி, குடிநீருடன் கலந்ததால், குடிநீருக்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டிருந்தனர். இந்த பிரச்சனைகள் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களாக வெடித்திருக்கிறது.
ஆனால், இது தவெகவுக்கான வாக்காக மாறுமா? என்பது கேள்விக்குறிதான். அடுத்து வரும் காலங்களிலாவது இந்த பிரச்சனைகள் விரைந்து சரி செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications