விழுப்புரம் அரசு ஊழியர் வழக்கு.. தமிழக அரசின் மகப்பேறு விடுமுறை அரசாணை ரத்து.. ஐகோர்ட் அதிரடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா என்பவர் 3-வது பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தார். ஆனால் பெண் ஊழியரின் 3-வது பிரசவத்துக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க விழுப்புரம் மாவட்ட நீதிபதி உத்தரவிடவில்லை. இந்த விவகாரத்தில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவினை பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா என்பவர் 3-வது பிரசவத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் மனு கொடுத்தார்.

3-வது பிரசவத்துக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசாணையைச் சுட்டிக்காட்டி, சாயி நிஷாவுக்கு ஓராண்டு விடுப்பு வழங்க மாவட்ட முதன்மை நீதிபதி மறுத்து விட்டார். ஏப்ரல் மாதத்துக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாயி நிஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், என்.செந்தில்குமார் ஆகியோர், "3-வது பிரசவத்துக்கு முழு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உயரநீதிமன்றமும உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால், சாயி நிஷாவுக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும். அதுகுறித்து ஒரு வாரத்தில் விழுப்புரம் மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், 3-வது பிரசவத்துக்கு 12 வாரங்களுக்கு விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. அந்த அரசாணையை ஏற்க முடியாது.
முதலாவது மற்றும் இரண்டாவது பிரசவத்தின் போது அனுபவிக்கும் அதே வேதனையையும், வலியையும்தான், மூன்றாவது பிரசவத்திலும் பெண்கள் அனுபவிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, 3-வது பிரசவத்தில் பாரபட்சம் காட்ட முடியாது. தமிழ்நாடு அரசின் அரசாணை, மாவட்ட நீதித்துறையைக் கட்டுப்படுத்தாது" என்று உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசு தற்போது பின்பற்றும் விதிகளின்படி, இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே ஒரு பெண் அரசு ஊழியருக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது குழந்தைக்கு இந்த நீண்டகால விடுப்பை அரசு அனுமதிப்பதில்லை.
தமிழக அரசின் தற்போதைய அரசாணையின்படி, மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் (சுமார் 3 மாதங்கள்) மட்டுமே விடுப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைக் காரணமாகக் காட்டியே பல துறை அதிகாரிகள் மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு விடுப்பு தர மறுக்கிறார்கள். உயர்நீதிமன்றம் இதில் மிகத் தெளிவான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறது. முதலாவது பிரசவமானாலும், மூன்றாவது பிரசவமானாலும் ஒரு தாய் அனுபவிக்கும் உடல் ரீதியான வலியும், குழந்தைக்குத் தேவைப்படும் பராமரிப்பும் ஒன்றுதான். இதில் குழந்தையை வைத்துப் பாரபட்சம் காட்டக்கூடாது என்று நீதிமன்றம் சொல்கிறது.














Click it and Unblock the Notifications