விநாயகர் சதுர்த்தி விழா.. அசம்பாவிதம் இல்லை.. சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீசார்.. டிஜிபி பாராட்டு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம், எந்தவித அசம்பாவித சம்பவங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கு, சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த மாதம் 31-ம் தேதி, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு, வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.

விநாயகர் சிலைகள்
இதனையொட்டி, தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், ஆயிரக்கணக்கான போலீசாரின் தீவிர பாதுகாப்புக்கு இடையே விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. போலீசார் தீவிர பாதுகாப்புப் பணி காரணமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம், அமைதியான முறையில் நடைபெறுவதற்கு, சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பணியில் 75,812 காவலர்கள்
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த வருடம் தமிழகம் முழுவதும் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இறுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், பாதுகாப்புப் பணியில் 75,812 காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் ஈடுபட்டனர். எப்போதும் இல்லாத வகையில் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

பொறுப்புணர்வுடன் காவல் பணி
சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர், அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் இப்பாதுகாப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தினர். அதோடு, பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் அனைவரும் பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எதிர்கால சந்ததியினருக்கு உதவும்
நுண்ணறிவு பிரிவின் கூடுதல் இயக்குநர் மற்றும் அவரது நுண்ணறிவு காவலர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. இப்பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறையினர் காட்டிய மன தைரியம் கடமை உணர்வு, தன்னடக்கம், பொறுமை போன்றவை, எதிர்கால சந்ததியினர் கடைபிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது.

காவலர்களுக்கு பாராட்டு
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்டு, தமிழ்நாடு காவல்துறை பெருமை சேர்த்த அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாக டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications