ஆழ்கடலில் கிடார் வாசித்த 'கூல்' விநாயகர்.. செல்ஃபி-க்கும் போஸ் கொடுத்து அசத்தல்.. வைரல் வீடியோ
சென்னை: சென்னை அருகே தனியார் ஆழ்கடல் அக்வாரியத்தில் கிடார் வாசித்தபடியே சிறுவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, செல்ஃபிக்கு போஸ் கொடுத்த விநாயகரின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்கவும் வழிபாடு நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இதனால் வழக்கமாகக் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை.
ஆனால் அதேநேரம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். இந்நிலையில், ஆழ்கடல் கண்காட்சி மையத்தில் நீச்சல் வீரர்கள் விநாயகர் போலக் காட்சி அளித்தது அனைவரையும் கவர்ந்தது.

ஆழ்கடல் விநாயகர்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் (விஜிபி) ஆழ்கடல் அக்வாரியம் அமைந்துள்ளது. இங்குக் கண்காட்சியைக் காண வரும் சிறுவர்கள் மற்றும் பொது மக்களைக் கவரும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் விநாயகர் போன்ற தோற்றத்தில் காட்சியளித்தனர். பின்னர் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஆசீர்வாதங்களை வழங்கினர்.

செல்ஃபி-க்கு போஸ் கொடுத்த விநாயகர்
ஆழ்கடலில் கிடார் வாசித்து மெல்லிய இசைக்கு நடனமாடியவாறே சிறுவர்களோடு விளையாடிய ஆழ்கடல் விநாயகரின் செயல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் இளைஞர்கள் எனப் பலரும் ஆழ்கடல் விநாயகருடன் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். விநாயகரும் உற்சாகத்துடன் போஸ் கொடுக்க அந்த இடமே கலகலப்பானது.

3 நாட்கள்
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்து ஒன்றரை ஆண்டு காலமாக வீடுகளிலேயே முடங்கி இருந்த பொதுமக்களுக்கு விநாயகரின் இந்த வித்தியாசமான தரிசனம் பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு விநாயகரைப் போற்றும் வகையில் தொடங்கப்பட்ட இந்த ஆழ்கடல் விநாயகர் நிகழ்வு மூன்று நாட்களுக்கு நடைபெறும் என ஆழ்கடல் கண்காட்சி மேலாளர் தெரிவித்தார்.

பாஜக கேள்வி
கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து விதமான மத விழாக்களின் கொண்டாட்டங்களுக்கும் தமிழக அரசு தடை விதித்தது. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் வழிபடவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக இது குறித்து சட்டசபையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "வரும் செப். 30ஆம் தேதி வரை கொரோனா நோய் பரவலைக் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது,

சில இடங்களில் தள்ளுமுள்ளு
அண்டை மாநிலமான கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை சமயத்தில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அம்மாநில அரசு தவறியதால் தான், அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாகவே மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடலாம். அதற்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை" என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், இதைத் தாண்டியும் பொது இடங்களில் சிலர் விநாயகர் சிலையை வைத்தனர். இதன் காரணமாக போலீஸ் அதிகாரிகள் அந்த விநாயகர் சிலைகளைக் கைப்பற்றினர். சில இடங்களில் இதனால் தள்ளுமுள்ளும் நிகழ்ந்தது. ஆனால் எந்த இடத்திலும் நிலைமை கையை மீறி செல்லவில்லை என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications