Vinayaka Chaturthi: விநாயகர் சதுர்த்தி! இதெல்லாம் செய்யவே கூடாது.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கறார் உத்தரவு
சென்னை: ஆக.27ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் மாசை ஏற்படுத்துகின்றன. எனவே இதனை தடுக்க தமிழக அரசு சில முக்கியமான அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விநாயகர் சிலைகளைச் செய்ய, களிமண், வைக்கோல் மற்றும் மக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலி கலவைகள்) போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்த கூடாது.
சிலைகளுக்குப் பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்க, மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம். சிலைகளின் ஆபரணங்களை வடிவமைக்க, உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.அதற்குப் பதிலாக, நீர் சார்ந்த மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பந்தல்கள் மற்றும் அலங்காரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, நீர் நிலைகள் மாசுபடாதவாறு சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications