பட்ஜெட்: பிடிஆர், அமைச்சர்கள் பற்றி அநாகரீக விமர்சனம் என பிரபல தமிழ் நாளிதழ் மீது உரிமை மீறல் புகார்
சென்னை: தமிழக சட்டசபையில் அமைச்சர்கள் தூக்கி வழிந்ததாக செய்தி வெளியிட்ட பிரபல நாளிதழ் மீது சட்டசபை உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்க சட்டசபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து பேசிய போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திக்கித் திணறியதாகவும், தலையை சொறிந்ததாகவும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமல்ல பட்ஜெட் உரையின் போது அமைச்சர்கள் சட்டசபையில் தூங்கி வழிந்து கொண்டிருந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நாளிதழ் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், ஆகியோர் விதி எண் 219ன் கீழ் சட்டசபை உரிமை மீறல் புகாரை எழுப்பியுள்ளார்கள்.
சட்டசபை உரிமை மீறல் புகாரை எழுப்பிய போது பேசிய வேல்முருகன், அவைக்கும், அவையின் மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறினார்.
அமைச்சர்கள் பற்றி அநாகரீக முறையில் விமர்சனம் செய்திருப்பது அவையின் உரிமையை மீறிய செயலாக இருப்பதால் சட்டசபை உரிமை மீறல் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினும், பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியையும், தலைப்பையும் குறிப்பிட்டு மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் பிறகு தான் இந்த விவகாரத்தை இப்படியே விடக்கூடாது என சட்டசபை உரிமை மீறல் புகார் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பிரபல நாளிதழ் மீது சட்டசபை உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்க சட்டசபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications