அரசியல்வாதிகள் சரியாக செயல்பட்டால்.. நடிகர்கள் நடிகர்களாகவே இருப்போம்.. நடிகர் விஷால் கொடுத்த பதில்!
சென்னை: அரசியல்வாதிகள் அவர்களின் வேலையை சரியாக செய்தால், நடிகர்கள் நடிகர்களாகவே இருப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களின் பணியை சரியாக செய்யவில்லை என்று கூறிய விஷால், அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே வரிசையில் நின்று சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால் சைக்கிளில் வந்து வாக்களித்தார். 2021ல் விஜய் எப்படி சைக்கிளில் வந்து வாக்களித்தாரோ, அதே பாணியை விஷாலும் பின்பற்றி இருக்கிறார்.

இதன்பின் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பாதை அமைப்பதற்கு முக்கியமான நாள். நான் என்னுடைய வாக்கினை செலுத்திவிட்டேன். தற்போது வரை 70% வாக்குகளை எட்டிவிட்டதாக கூறினார்கள். கேரளாவில் 80% வாக்குப்பதிவு கடந்துவிட்டது. தயவு செய்து இதுவரை வாக்களிக்காதவர்கள் வந்து வாக்கு செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.. தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளையும், ஆதங்கத்தையும் நமக்குள் பேசினால் மட்டும் போதாது. அதனை நமது வாக்கு மூலமாக பதில் அளிக்க வேண்டும் . பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 2021ல் சைக்கிளில் வந்து வாக்கு அளித்த விஜய் அரசியலுக்கு வந்தது போல், நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷால், அரசியல்வாதிகள் அவர்களின் வேலையை செய்தால், நடிகர்கள் நடிகர்களாகவே இருக்கிறோம். அரசியல்வாதிகள் அவர்களின் வேலைகளை சரியாக செய்யவில்லை. அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பேன்.
நிறைய இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. சாலைகளை சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது. வெள்ளத்தின் போது நாங்களே களமிறங்கி பணியாற்றியுள்ளோம். இந்த தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை யார் வென்றாலும், சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications