டாக்டர், மருந்து கசப்பாதான் இருக்கும்.. உங்களுக்கு தெரியாததா.. அன்புமணியின் மைத்துனர் பதிலடி
அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டிற்கு விஷ்ணுபிரசாத் பதிலடி தந்திருக்கிறார்.
சென்னை: டாக்டர்.. மருந்து கசப்பாதான் இருக்கும்.. அதுபோலதான் உண்மையும் என்று அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு அவரது மைத்துனர் விஷ்ணு பிரசாத் பதிலடி தந்துள்ளார்.
எம்.கே.விஷ்ணு பிரசாத் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர். கொஞ்ச நாளாகவே பாமகவை திமுகவில் இணைக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்து கொண்டது.
இதனால் அதிருப்தி அடைந்த விஷ்ணு பிரசாத், "உங்கள் சமுதாயத்தை அப்படியே அங்க கொண்டு போய் அடமானம் வைத்து விட்டீர்களே. இரு தரப்பிலும் கூட்டணி பேரம் நடந்துள்ளது, கண்டிப்பா பாமக தேர்தலில் தோற்கதான் போகிறது. குரு ஆத்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது" என்று வெளுத்து வாங்கி இருந்தார்.
பாதிப்பு இல்லை
விஷ்ணுபிரசாத் கூறிய குற்றச்சாட்டுக்கு நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அன்புமணி ராமதாஸ் வருத்தம் சொன்னார். "அவரது குற்றச்சாட்டால் எங்கள் கூட்டணிக்கோ, கட்சிக்கோ பாதிப்பு இல்லை. அவர் என் காலேஜ் நண்பர். 30 வருஷமாக எனது மைத்துனர்.
ஒரு சீட்டு கிடைக்கும்
ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இப்படி பேசுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனது 3 பெண்களுக்கும் அவர் மடியில் வெச்சுதான் காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். இப்படி எங்களை விமர்சித்ததற்காக அவருக்கு ஒரு சீட் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஒரு சீட்டுக்காக, இந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியிருந்தார்.
அரசியல்தான்
இந்நிலையில் அன்புமணியின் இந்த பேச்சுக்கு விஷ்ணு பிரசாத் கருத்து கூறியுள்ளார். அதில், "இதற்கு முன்பு நடத்தப்பட்ட எம்பி தேர்தல்களில் எனது தந்தையும், நானும் பாமகவினரால் தோற்கடிக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அதனை நான் அரசிலாகத்தான் பார்த்தேனே தவிர, உறவாக பார்க்கவில்லை.
செயல் தலைவர்
அப்படி இருக்கும்போது, ஸ்டாலின் சொல்லி ஒரு தொகுதிக்காகதான் பேசினேன் என்று சொல்வது கொஞ்சமும் சரி கிடையாது. ஒரு காங்கிரஸ் செயல் தலைவர் என்ற முறையில்தான் ஒரு தொகுதிக்காக அல்ல, 40 தொகுதிகளுக்காகவும் நான் பேசினேன்.
உண்மைகள்
டாக்டராக இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை வலி என்றால் என்ன என்பது நல்லாவே தெரியும். மருந்து கசப்பு பற்றியும் நன்றாகவே தெரியும். அதே போலதான் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்" என்று விஷ்ணு பிரசாத் பதிலடி தந்திருக்கிறார்.