“விஸ்வகுருவின் படுதோல்வி இது!” மணிப்பூர் கலவரம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இம்மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, அம்மாநிலத்தில் 53 சதவிகிதம் உள்ள மெய்டெய் மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தனது தேர்தலுக்கு பயன்படுத்திக்கொண்ட பாஜக, மெய்டெய் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

எதிர்பார்த்தபடி இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், மெய்டெய் மக்கள் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்து வந்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது.
இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்களான குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த மே மாதம் 4ம் தேதி பேரணி நடத்தினர். அதேபோல மெய்டெய் மக்கள் போராட்டம் நடத்தினர். இது இரண்டும் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது. இதில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 175க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200க்கும் அதிகமானோர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அப்போது சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியது. எனவே மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இப்படி இருக்கையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் பிரனே் சிங்கின் பூர்வீக வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு கும்பல்கள் தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது. இதனை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் முறியடித்துள்ளனர். இந்நிலையில், இங்கு சட்டம் ஒழுங்கை மீட்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதாவது, "மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் 'விஸ்வகுரு' மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார். இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலமாகியுள்ளன. இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. மாநில மற்றும் யூனியனில் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது" என்று x சோஷியல் மீடியா தளத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications