விவேக்கின் "அந்த" கடைசி ஆசை.. இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கலந்து விட்ட சோகம்!
நடிகர் விவேக் மறக்க முடியாத மாமனிதராக மண்ணில் தங்கிவிட்டார்
சென்னை: நகைச்சுவையே இன்று சரிந்து விட்டது.. நிறைவேறாத ஆசையுடன் தன் மூச்சையும் நிறுத்தி கொண்டது...!
சுமார் 30 வருட காலமாக தமிழக மக்களை, சிந்தனையாலும் சிரிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகர் விவேக்.. இந்த 30 வருடங்களில் விவேக்கின் பரிமாணங்கள் ஏராளமானவை.. இயல்பாகவே கிரியேட்டிவிட்டி என்பது இவருக்குள் பொதிந்து போயிருந்தது.
Recommended Video
அதை அடையாளங்கண்டு, மெல்ல மெல்ல வெளிக்கொணர்ந்தவர் கே.பாலசந்தர்.. எப்படி கமலை செதுக்கினோரோ, அப்படியேதான் விவேக்கையும் நம்பிக்கையுடன் செதுக்கினார்.. அபரிமிதமான எதிர்பார்ப்பை விவேக்மீது வைத்திருந்தார் கேபி.
விவேக் மரணத்தில் அரசியல் செய்வது கேவலமான செயல்.. கொந்தளிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர்
மேதாவிகள்
அதனால்தானோ என்னவோ, கமலுக்கும் விவேக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.. இருவருமே ரசனைவாதிகள்.. இருவருமே மேதாவிகள்.. இருவருமே சிந்தனைவாதிகள்.. இருவருமே கேபியின் சீடர்கள்.. இருவருமே சமூக அக்கறை நிறைந்தவர்கள்.. இருவருமே எழுத்து சிற்பிகள்.. ரஜினி முதல் தனுஷ் வரை சேர்ந்து நடித்த விவேக், ஏனோ கமலுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை.. நடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
கிசுகிசுக்கள்
இவர்கள் 2 பேரும் ஏன் நடிக்கவில்லை என்பது ஒருகட்டத்தில் விவாதமாகவும் சினிமா உலகில் எழுந்தது.. கருத்து கமெடியனாக இருந்ததால் தானோ என்னவோ விவேக்கை கமல் ஒதுக்கிவிட்டார் என்ற கிசுகிசுக்கள் வலம் வந்தன.. வடிவேலுக்கு மட்டும் இத்தனை சான்ஸ் தரும்போது, கமல் நினைத்திருந்தால் விவேக்குக்கு எப்போதோ வாய்ப்பை தந்திருக்கலாமே? என்றும் முணுமுணுப்புகள் எழுந்தன.
ட்விட்டர்
இந்தியன் 2 படத்தில் விவேக் நடிப்பார் என்ற செய்திகள் வெளிவந்ததும்தான் அத்தனை அனுமானங்களும் நொறுங்கி விழுந்தன... "என்னுடைய ரொம்ப கால கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது... அந்தக் கனவு 'இந்தியன் 2' வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்' என்று தன் நீண்ட கால கனவு குறித்து ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார் விவேக்.
மெயின்டெயின்
எனினும், என்ன காரணத்தினாலோ கடைசி வரை இவர்கள் நடிக்கவே இல்லை.. ஒருமுறை இதை ஆதங்கமாகவே விவேக் ஒரு மேடையில் வெளிப்படுத்தி இருந்தார்.. கமல் சாருடன் இணைந்து நடிக்க 30 வருஷமா காத்திருக்கிறேன்.. இணைந்து நடிக்கவே இல்லை.. 30 வருஷமாகவே இப்படியே மெயின்டெயின் பண்றோம்.." என்றார். இதற்கு பிறகு என்னென்னவோ நடந்து முடிந்துவிட்டது..
கடைசி ஆசை
இன்று விவேக்குக்கு கமல் சொல்லி உள்ள இரங்கலில், "நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் விவேக் மீதான மொத்த அபிப்பிராயம், பாசத்தை கமல் இழையவிட்டுள்ளது புலப்படுகிறது. ஆனாலும், விவேக்கின் கடைசி ஆசை நிராசையாகவே காற்றில் கரைந்து விட்டது!