முதல்வர் பதவிக்கு தகுதியானவர் யார்? மிக தூரமாக 3வது இடத்தில் சசிகலா.. டைம்ஸ் நவ் சர்வேயில் தகவல்!
சென்னை: தமிழகத்தில் யார் முதல்வர் பதவிக்கு சிறப்பானவர் என்று டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் கூறியுள்ள கருத்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் சி ஓட்டர் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்துடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி புதன்கிழமை இரவு வெளியிட்டது.
இந்த கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 177 தொகுதிகள் வரை வரக்கூடும் என்றும், கடந்த தேர்தலை விட இது 79 தொகுதிகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 49 தொகுதிகளில் மட்டும் தான் வெல்லும் என்றும் கடந்த தேர்தலை விட இது 87 தொகுதிகளில் குறைவு என்றும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
பல கேள்விகள்
வெறுமனே வெற்றி தோல்வி மற்றும் வாக்கு சதவீதம் பற்றி மட்டுமல்லாது இந்த கருத்துக் கணிப்பில் பொதுமக்களிடம் பல்வேறு வகையான கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு விடை பெறப்பட்டுள்ளது. அப்படியான ஒரு சுவாரசிய கேள்வி ஒன்று இருக்கிறது.
ஆச்சரிய தகவல்
அதாவது, தமிழகத்தில் முதல்வர் பதவிக்கு யார் மிகவும் தகுதியான நபர் என்று ஒரு கேள்வி பொதுமக்களிடம் முன் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு விடைகள் வந்து விழுந்துள்ளன அதில்தான் ஒரு ஆச்சரிய தகவல் ஒளிந்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின், எடப்பாடியார்
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றதில் 43.1 சதவீதம் பேர் ஸ்டாலின் தான் முதல்வர் பதவிக்கு சரியான நபர் என்று தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவிக்கு தகுதியான நபர் என்று 29.7 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். ஓகே.. இதைக்கூட எதிர்பார்த்தது என்று நினைத்து விட்டு விடலாம். ஆனால், மூன்றாவது ஒரு நபர் பெயரை அதிகம் மக்கள் உச்சரித்துள்ளனர். அதுதான் இந்த கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.
3வது இடத்தில் சசிகலா
அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள சசிகலாவுக்கு 8.4 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தின் முதல்வராக அவர் சிறந்த தேர்வாக இருப்பார் என்று இத்தனை பேர் தெரிவித்துள்ளார்கள் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
இதனடிப்படையில் பார்த்தால் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார் சசிகலா. அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.
சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு
ஒருவேளை, சசிகலா அதிமுகவில் இணைந்து இருந்தால், அதிமுகவுக்கு பலம் கூடி இருக்கும் என்பதைத்தான் மக்களின் இந்த பதில் உணர்த்துவதாக தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பு இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 8709 பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பல வாரங்கள் கடந்து தான் இந்த சர்வே எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் சசிகலாவுக்கு இத்தனை பேர் ஆதரவு அளித்திருப்பதாக சர்வே கூறுகிறது. ஒருவேளை அவர் தீவிர அரசியலில் இருந்திருந்தால், அவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் மேலும் மேலும் பெருகி இருக்கும் என்பதற்கான சமிக்ஞையாக இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பார்க்கப்படுகின்றன.