வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் வராவிட்டால் என்ன செய்வது? மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அரசு அதிகாரிகளும், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளும் இந்தப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்கள் சமர்ப்பித்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அனைத்தும் பி.எல்.ஓக்கள் மூலம் வாக்காளர் சேவை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

டிசம்பர் 4 ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறும். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும்.
இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து SIR பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவம் கொடுக்காவிடில் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது என்றும் 3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
2002/ 2005 வாக்காளர் பட்டியலில் தனது பெயரோ அல்லது உறவினரின் பெயரோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை மட்டும் நிரப்பி SIR படிவத்தை ஒப்படைத்தாலும் அவர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும். வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிசம்பர் 9 - ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications