எந்த பட்டனை அழுத்தினாலும்... இரட்டை இலைக்கே வாக்கு... வாக்காளர்கள் பரபரப்பு புகார்
சென்னை: ஆவடி மற்றும் அவினாசி பகுதிகளில் எந்தச் சின்னத்தில் பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வெயில் நிலவி வரும் நிலையிலும், காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தங்கள் வர்க்குகளைப் பதவி செய்தனர்.
இந்நிலையில், அவினாசி தொகுதிக்கு உள்பட்ட கனியாம்பூன்டியில் 312வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர். காலை முதல் 250 வாக்குகள் பதிவான நிலையில் அந்த வாக்குச்சாவடியில் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையை அடுத்துள்ள ஆவடி விவேகானந்தா பள்ளியில் உள்ள 123வது வாக்குச்சாவடியில் திமுகவுக்கு வாக்களித்தால் விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை சின்னம் காட்டுவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் சிங்காநல்லூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.